மோடி குஜராத் தொழிலதிபர்களுக்கான பிரதமர் மட்டுமே! தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

viduthalai
1 Min Read

அய்தராபாத், நவ. 19- “நரேந்திர மோடி இந்தியாவுக்கான பிரதமர். ஆனால், அவர் குஜராத்திற்கான பிரதமர் போன்று செயல்படுகிறார்” என ரேவந்த் ரெட்டி தெரிவித் துள்ளார்.

“கடந்த 2004 முதல் 2014-வரை அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும், பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். அந்த கால கட்டத்தில் குஜராத் மாடல் என நரேந்திர மோடி விளம்பரம் செய்தார்.

அப்போது, மோடிக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்தது. அன்று எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் குஜராத் மாடல் என உருவானது” என்று ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார். “ஆனால், இன்று பிரதமராக இருக்கும் மோடி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிராகரிக்கிறார்.
எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடிவுக்கு கொண்டு வர அவர் செயல்படுகிறார். இது தான் குஜராத் மாடல்” எனவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ் சாட்டியுள்ளார்.

“தெலங்கானாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வந்தால், அவர்களை குஜராத்திற்கு செல்லு மாறு பிரதமர் அலுவலகம் கூறுகிறது. மோடி இந்தியாவுக்கான பிரதமர். ஆனால், அவர் குஜராத்துகான பிரதமர் போன்று செயல்படுகிறார்” என்றும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். “அய்ந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து மோடி பேசுகிறார். ஆனால், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அவர் சேர்த்துக் கொள்ளவில்லை.

தெலங்கானா, ஆந்திரா, கருநாடகா, தமிழ்நாடு ஆகியவற்றை தவிர்த்து அய்ந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தை எவ்வாறு உருவாக்குவார். மகாராட்டிரா இல்லாமல் எப்படி சாத்தியமாகும்? இந்தியாவின் பொருளாதார தலைமையிடம் மகாராட்டிராதான்.

மகாராட்டிராவில் இருந்து 17 முதலீடுகள் குஜராத்திற்கு மாற்றப் பட்டுள்ளன. இந்த குஜராத் மாடல் இந்தியாவிற்கு ஆபத்தானது” என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *