மும்பை, நவ.13- மராட்டிய சட்டமன்றத் தேர்தலையொட்டி பா.ஜனதாவை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ராவ்சா கேப் தன்வே கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் (11.11.2024) ஜல்னா மாவட்டம் போகர்தான் பகுதியில் மேனாள் மாநில அமைச்சரும், சிவசேனா தலைவருமான அர்ஜூன் கோத்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர், சிவசேனா தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து புகைப்படம் எடுத்தார். அப்போது அங்கு நின்ற ஒருவரும் புகைப்படத்தில் வர ஆசைப்பட்டு ராவ்சாகேப் தன்வே அருகில் வந்து நிற்க முயன்றார். அவரை ராவ்சாகேப் தன்வே அருகில் வர விடாமல் காலால் எட்டி உதைத்தார்.
புகைப்படம் எடுக்க வந்தவரை ராவ்சாகேப் தன்வே எட்டி உதைக்கும் காட்சிப்பதிவுகள் தற்போது சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேனாள் ஒன்றிய அமைச்சரிடம் உதை வாங்கியவரின் பெயர் சேக் என்பது தெரிய வந்தது. அவர் கூறுகையில், “நான் ராவ்சாகேப் தன்வேயின் நெருங்கிய நண்பன். 30 ஆண்டு களாக எங்களுக்குள் நட்பு உள்ளது. பரவி வரும் செய்தி தவறானது. நான் ராவ் சாகேப் தன்வேயின் சட்டையை சரி செய்யவே முயற்சி செய்தேன்” என் றார்.
ராவ்சாகேப் தன்வே செயல் குறித்து உத்தவ் சிவசேனாவை சேர்ந்த மேனாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே கூறுகையில்,
“ராவ்சாகேப் கால்பந்து விளையாட்டில் இருந்து இருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டு களாக பா.ஜனதா தொண்டர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே பா. ஜனதாவுக்கு மீண்டும் ஓட்டுப்போட வேண்டுமா என்பதை அக்கட்சியினர் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.