சென்னை, நவ.5- ‘முதலமைச்சர் மருந்தகம்’ அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று (4.11.2024) தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர நாள் விழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதலமைச்சர் மருந்தகங்கள் தொடங்கப்படும்“ என்று அறிவித்தார்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக். 29ஆம் தேதி முதல மைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மருந்தகங்கள் அமைக்க மேற் கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும்தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கினார்.
முதலமைச்சர் மருந்தகத்துக்கு தேவையான பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப் படும்.
தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவை யான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணைய தளத்தில் வழங்கப் பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் மூலம் முதலமைச்சர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.