பெரியார் குயில்
தாராபுரம்
மீண்டும் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். தனது தமிழ் மொழி வெறுப்பை ஹிந்தி வார கொண்டாட்டத்தின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளது. திட்டமிட்டு தமிழ் தாய் வாழ்த்து பாடலை திருத்தி எழுதி பாடகர்கள் பாடும் பொழுது குழப்பம் ஏற்படும் வகையில் கொடுத்திருக்கிறார்கள். திராவிட மொழிக் குடும்பம், திராவிடர், திராவிட நாடு கசக்கிறது காவிகளுக்கு! 1911 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் இந்திய தேசிய கீதத்தை எழுதுகிறார். அதில் “இந்திய தாயே நின் திருப்பெயர் திராவிடத்தை உள்ள கிளர்ச்சி அடையச் செய்கிறது” எனக் குறிப்பிடுகிறார்.
இனமான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய கீதம் பாடும் பொழுது “திராவிடம்” என்ற சொல்லை விட்டு விட்டு பாடி விடுவீர்களா? என முகத்தில் அறைந்தாற் போல் ஒரு வரலாற்று கேள்வியை ஆரிய கும்பலுக்கு பதிலடியாக எழுச்சியுடன் தந்தார். சுந்தரனார் அவர்கள் 1887 துவங்கி1891 ஆம் ஆண்டு மனோன்மணியம் நூலை திருவனந்தபுரத்தில் வெளியிடுகிறார். அதன் முதல் பக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறுகிறது. 20 ஆண்டுகள் கழித்து அதே சொல்லாடலை இந்தியாவின் முதுபெரும் கவிஞர் தாகூர் பயன்படுத்துகிறார்.
இந்த அறிஞர்களுக்கு தெரிந்த உண்மை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலுக்கு தெரியாமல் இல்லை. வேண்டுமென்றே மொழிப் பெருமையை அழிக்க வேண்டும் – அறிஞர்கள் போல் தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு ஆளுநர் மூலம் அரங்கேற்றுகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேரூன்றி இருக்கும் திராவிட மொழிக் குடும்ப வரலாறும் பண்பாடும் இவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் .
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழை” நீச பாஷை” என்று கருதி சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை. அதைப் பற்றி ஏன் என்று கேள்வி கேட்க கூட ஆரிய அச்சம் ஆட்டிப்படைத்தது!! ஆனால் மொழியை ஒரு தகவல் தொடர்பு கருவியாகக் கருதிய தந்தை பெரியார் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எப்போதும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி வந்தார்.
“சதுமறை ஆரியம் வரும்முன்
சகமுழுவதும் நினதாயின்”
என்று உலகமெல்லாம் தமிழ் மொழி பரவிக் கிடக்கிறது என்று பதிவு செய்தவர் சுந்தரனார் அவர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று தானோ சுந்தரனார் அன்றே பாடிவிட்டார்
“விந்தம் அடக்கினோன் தந்த நற் தமிழ் மொழி
தற்சுதந்திரம் அறும் அற்பர் வாய்ப் படுமோ?” என்று!