வங்கக் கடலில் ‘டனா’ புயல் உருவாகிறது

Viduthalai
3 Min Read

சென்னை, அக்.21- வங்கக்கடலில், புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. இந்த புயலுக்கு ‘டனா’ என பெயரிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. அதன் படி, தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. அந்த நேரத்தில் வங்கக்கட லில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங் களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை கிடைத்தது.
மேலும் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வரும்போது மேலும் மழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது பொய்த்து போனது.

வங்கக்கடலில் புயல்
இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை யொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று (21.10.2024) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (22ஆம் தேதி)தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் (23ஆம் தேதி) புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது எனவும் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘டனா’ என்று பெயரிடப் பட்டிருக்கிறது. இந்த புயலினால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதே தற்போது வரையிலான தகவலாக இருக்கிறது.

எங்கு கரையை கடக்கிறது?
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-வங்காள தேசம் இடையே மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஒடிசா, மேற்கு வங் காளம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ஆனால், அரபிக்கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுவதால், மேற்கு காற்று தமிழ்நாட்டு பக் கம் வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதா கவும், இதனால் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்ன லுடன் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார்.
வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச் சந்தர் தெரிவித்தார். இது வட கிழக்கு பருவமழை காலத்தில் அரிதாக நிகழக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படு வதாகவும் அவர் கூறினார்.

இன்றும், நாளையும்
இதற்கிடையில் இன்றும், நாளையும் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்தி ருக்கிறது.
மேலும் இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்,அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங் களில் கனமழையும் பெய்யக்கூடும்.

புயலுக்கு பெயர் ‘டானா’
பருவமழை காலங்களில் புயல்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் புயல்களை அடையாளப்படுத்தும் விதமாக அதற்கு பெயர்கள் சூட்டப் படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. உலக வானிலை அமைப்பு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக் கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றில் உறுப்பு நாடுகளாக வங்காள தேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, அய்க்கிய அரபு எமி ரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் உள்ளன.
இந்த நாடுகள் வட இந்திய பெருங்கடல், அரபிக்கடலில் உருவாகும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டும் வகையில், ஒவ்வொரு நாடும் 13 பெயர் வீதம் தலா 169 பெயர்களை தேர்வு செய்து அளிக்கும்.
அதில் உள்ள வரிசைப்படி புயல் களுக்கு பெயர் சூட்டப்படுகின்றன. அதன்படி, தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘டனா’ என்று பெயரிடப்பட இருக்கிறது. இது கத்தார் நாடு வழங்கிய பெயர் ஆகும். ‘டனா ’என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘விலை மதிப்பற்ற அல்லது அழகான முத்து’ என்று பொருள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *