லண்டன் புறப்பட்ட ராகுல் காந்தி தேர்தலுக்கு பிறகு இதுவே முதல்முறை!

viduthalai
4 Min Read

புதுடில்லி, செப். 8– காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, 6.9.2024 அன்று அதிகாலை 1:50 மணிக்கு பிஏ-142 விமானம் மூலம் லண்டன் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேராக அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே காங்கிரஸ் கட்சிக்கு அவர்களின் பணிகளில் உதவி செய்யும் சாம் பிட்ரோடா என்ற நபர், ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மூன்று நாட்கள் அமெரிக்காவில்
தங்கும் ராகுல் காந்தி?

முக்கிய நபர்களிடம் பேசி சில முடிவுகளை எடுக்க ராகுல் காந்தி மூன்று நாட்களுக்கு அமெரிக்கா செல்கிறார் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் அங்கு இருக்கும்போது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், வணிக உரிமையாளர்கள், உள்ளூர் தலைவர்கள் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சாம் பிட்ரோடா என்ற நபர் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து அனைவருக்கும் கூறும் காட்சிப்பதிவை நேற்று (7.9.2024) பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதி டல்லாஸிலும், செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வாஷிங்டனிலும் ராகுல் காந்தி இருப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற
பிறகு முதல் பயணம்

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்கிறார். “அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அரசியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், செய்தியாளர்கள் உட்பட பலர் ராகுல் காந்தியுடன் பேச விரும்புகின்றனர். ராகுல் காந்தி அவரது இந்த பயணத்தில் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திக்கிறார். மேலும் உள்ளூர் இந்திய வம்சாவளி மற்றும் சில தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச உள்ளார். பின்னர், டல்லாஸில் உள்ள முக்கிய தலைவர்களுடன் இரவு உணவில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கு மறுநாள் வாசிங்டன் டிசிக்கு சென்று பலரைச் சந்திப்பார்” என்று பிட்ரோடா தெரிவித்துள்ளார்.

கல்வியில் தமிழ்நாடு உயர்வாக உள்ளது
அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதா?
ஆளுநர் மீது கே.பி.முனுசாமி காட்டம்

ஓசூர், செப். 8- ஓசூரில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று (7.9.2024) அளித்த பேட்டி: மகாவிஷ்ணு விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அரசு பள்ளியில் மகா விஷ்ணுவை பேச வைத்த தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர். அரசு பள்ளியில் அவரை பேச வைப்பதற்கு அனுமதி கொடுத்தவர்கள் யார்? என விசாரித்து, அவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி முகாம் நடத்தி, மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளின் தரம் குறித்து, தமிழ்நாடு ஆளுநர் ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்று பேசி வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கல்வியில் உயர்வாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் உள்ள சில ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பள்ளி கல்வித்துறையின் தரத்தை குறைத்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலி வருகைப் பதிவேடு:
டில்லி, ராஜஸ்தானில்
27 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ தாக்கீது

புதுடில்லி, செப். 8- பள்ளிக்கு வராத மாணவர்களை வந்ததுபோல் போலி வருகைப் பதிவேடுகளை சமர்ப்பித்த டில்லி, ராஜஸ்தானில் உள்ள 27 பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தாக்கீது அனுப்பியுள்ளது.
இதையடுத்து, விதிகளை பின்பற்றாத பள்ளிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அய்அய்டி, ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் இதுபோன்ற பள்ளிகளில் சேர்ந்துவிட்டு போட்டித் தேர்வு மய்யங்களில் முழுநேரமும் தங்கி பயின்று வருகின்றனர். அவர்கள் ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்வுகளை எழுதுவதற்கு மட்டுமே பள்ளிகளுக்கு வருகின்றனர்.
மாநில இடஒதுக்கீடு அடிப்படையில் சில மாநிலங்களில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக டில்லியில் 11,12-ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் ‘டில்லி இடஒதுக்கீடு’ அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், டில்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ திடீரென சோதனை மேற்கொண்டது. அப்போது 27 பள்ளிகளில் வகுப்புகளுக்கு வராத மாணவர்களை வந்ததுபோல் போலி வருகைப் பதிவு தரவுகளை தயார் செய்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாதது சோதனையின்போது தெரியவந்ததாக சிபிஎஸ்இ செயலர் ஹிமன்ஷு குப்தா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முறை கேடுகளில் ஈடுபட்டுள்ள பள்ளிகளுக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் செயல்படும் பள்ளிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *