திருவையாறு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருவையாறு, ஆக.29 தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள், சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக திருவையாறு ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவையாறு ஒன்றியம், பேரூர் திராவிடர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 26.8.2024 அன்று மாலை 6 மணிக்கு வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் ஒன்றிய செயலாளர் இல்லமான திருவையாறு மேலவட்டத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தஞ்சை மாநகர இளைஞரணி செயலாளர் ஆ.பெரியார் செல்வம் கடவுள் மறுப்பு கூறிட, ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்க உரையாக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.குணசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தளராத உழைப்பு, சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் மிகவும் பிரமாண்டமாக அமைய உள்ளதையும், அதற்கான பெரும் பொருட்செலவினை பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகத் திரட்டித் தந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும், செப்டம்பர் 17ஆம் நாள் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளினை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி உறுதிமொழி ஏற்றும் வாய்ப்புள்ள இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும்,
திருவையாறு ஒன்றியத்தில் நமது இயக்கத்தின் துணை அமைப்புகளுக்கு பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுவதையும், ‘விடுதலை’ நாளிதழின் சந்தாதாரராக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இருப்பது குறித்தும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
ஒன்றிய பொறுப்பாளர்களும், பேரூர் கழக பொறுப்பாளர்களும் தங்கள் பகுதிகளில் தந்தை பெரியாரின் பிறந்த நாளினை எவ்வாறு சிறப்பாக கொண்டாட உள்ளோம் எனவும், பெரியார் உலகம் அமைந்திட பெருமளவில் நிதி திரட்டித் தருவோம் எனவும் உறுதியுடன் பேசினர்.
தஞ்சை மாநகர இளைஞரணி செயலாளர் சி. பெரியார் செல்வம் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு .மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி மாநில ப.க. அமைப்பாளர் கோபு பழனிவேல், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அஅருணகிரி ஆகிய உரையாற்றினர்.
தீர்மானங்களை ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் வாசித்தார்.
நிறைவாக ஒன்றிய ப.க செயலாளர் க. இரணியன் நன்றி கூறிட இரவு சிற்றுண்டிக்குப் பின் இரவு 8 .30 மணிக்கு கலந்துரை யாடல் கூட்டம் நிறைவுற்றது.