அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Viduthalai
3 Min Read

சத்தியமங்கலம், ஆக.18 ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று (17.8.2024) தொடங்கி வைத்தார்.

கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம். 50 ஆண்டு கால அக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2016-ஆம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ. 3.27 கோடியை ஒதுக்கினார். அதைத்தொடா்ந்து அரசாணை வெளியிட்டார்.

இந்நிலையில் அவிநாசியில் 2017-ஆம் ஆண்டு ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடை பெற்றது. பின்னா் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 2018-ஆம் ஆண்டு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ. 1,916.41 கோடி நிதியில் இந்தத் திட்டம் முழுமை அடைந்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்தை விரைவில் தொடங்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமைச்சா் சு.முத்துசாமியிடம் அறிவுறுத்தினார். இதனைத் தொடா்ந்து இந்தத் திட்டத்தின் தொடக்க விழா பவானி காளிங்கராயன் அணைக்கட்டு அருகில் முதலாவது நீரேற்று நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட்17) நடைபெறும் என நீா்வளத் துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இந்தத் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சா் சு.முத்துசாமி பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்வின்போது வியாழக்கிழமை அறிவித்தார்.

சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத் தினை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.8.2204) தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் செயல்பாட்டு வந்ததன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன் றிற்கு 1.50 டிஎம்சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கு் தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி நீரேற்று நிலையத்தில் அத்திக் கடவு – அவிநாசி திட்ட துவக்க விழாவில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வ ராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், நீர்வளத் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம், சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ். நாகரத்தினம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *