பெரம்பூர், ஆக.13 சென்னை திரு.வி.க. நகரில் நில மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவிச்சந்தி ரன் சாந்தி என்பவரின் நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தி வீடு கட்டிக்கொண்டார்.
இதனை அடுத்து தனது நிலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சட்டவிரோதமாக வீடு கட்டி வசிப்பதாகவும், அதனை மீட்டு தருமாறும் சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தித் தரும்படி, திரு.வி.க. நகர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியது.
அதன்பேரில், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் திரு.வி.க. நகர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபாநிதி தலைமையிலான காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீல் வைக்க சென்றனர். அப்போது, அந்த இடத்தில் இருந்த வீட்டை சோதனை செய்தபோது, 2 அடி நீளம் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் ஒன்றரை அடி நீளம் உள்ள 2 அம்மன் சிலைகள் இருந்தன. விசாரணையில், அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர் ரவிச்சந்திரன் என்பதும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சென்னை மாநகர ஒருங் கிணைப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்த சிலைகளை அவருக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து திரு.வி.க நகர் காவல்துறையினர், 2 நாள்களுக்குள் சிலை சம்பந்தமான ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் சிலைகளை காவல்துறையினர் காவல் நிலையம் கொண்டு வந்து நீதிமன்ற கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிலைகள் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டன என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.