புதுடில்லி, ஆக. 1- இந்தியாவில் புதிய கனரகத் தொழில்கள் நிறுவப்பட்ட விவரங்கள் குறித்த கேள்வி ஒன்றை தி.மு.க. மக்களவைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., 30.7.2024 அன்று கேள்வி எழுப்பி இருந்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் ஆதரவு இல்லாத காரணமாக நாட்டில் புதிய கனரகத் தொழிற்சாலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்பது உண்மையா?
அப்படி இல்லையென்றால், துறை வாரியாக, புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் விவரங்கள் என்ன? மொத்த முதலீடு எவ்வளவு? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? “மேக் இன் இந்தியா” திட்டம் எந்த அளவுக்கு பெரிய தொழில்கள் அமைந்திடக் காரணமாக இருக்கிறது? என்று பல்வேறு புள்ளி விவரங்களை இந்த கேள்வியின் வாயிலாக டி.ஆர்.பாலு கேட்டிருந்தார்.
அமைச்சர் பூபதிராஜு
சீனிவாச வர்மாவின் பதில்
இதற்கு பதிலளித்த ஒன்றிய கனரகத் தொழில் துறைக்கான இணை அமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மா, தொழில்கள் – மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ள பொருள் என்பதால் கனரகத் தொழில்கள் குறித்த நாடு தழுவிய விவரங்கள் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என எழுத்துப் பூர்வமான தனது பதிலில் மக்களவையில் 30.7.2024 அன்று தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பான பிற கேள்விகள் எழும் வாய்ப்பில்லை எனவும் தனது பதிலில் இணை அமைச்சர் வர்மா தெரிவி்த்துள்ளார்.
கனரகத் தொழில்துறைக்கு
இரண்டு அமைச்சர்கள்
எச்.டி.குமாரசாமி கனரகத் தொழில்கள் துறைக்கான கேபினட் அமைச்சர் என்பதும், பூபதிராஜு சீனிவாச வர்மா இணை அமைச்சர் பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.