“சிலர் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். ஆமாம்! நான் ஒடுக்கப்பட்ட வகுப்பில்தான் பிறந்தேன். அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முழுக்க, முழுக்க அது ஹிந்து மதத்தின் சதி! அதனாலே ஹிந்து மதத்திற்கு எதிராக, என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். பெரியாரும், திராவிடர் கழகமும் எனது பிறவி இழிவை நீக்கி, சுயமரியாதை உணர்வைத் தந்திருக்கின்றன! நான் திராவிடர் கழகத்தில் இருக்கிறேன் என்கிற ஒரே காரணத்திற்காக நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துவிட்டேன். கடவுள் இல்லை, ஜாதி ஒழிக என்றால் கிராமங்களில் ஒரு மாதிரி பார்ப்பார்கள்! அதுவும் ஒடுக்கப்பட்ட இனத்தில், அதுவும் ஒரு பெண்மணி என்கிற போது எதிர்பாராத, வித்தியாசமான எதிர்ப்புகள் எல்லாம் வரும் – அதையும் சந்தித்தே கடக்கிறேன்!
நீங்கள் அவமானப்படுத்துங்கள், எதிர்ப்புத் தெரிவி யுங்கள், உங்களால் முடிந்தது அவ்வளவு தான்! ஆனால் இந்தச் சமூகத்திற்கு என்னால் முடிந்த பணிகளைத் தந்து, ஒரு முற்போக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன்! என் பாதை வேறு; என் சிந்தனை வேறு! நான் ஒரு தி.க., நான் ஒரு பெரியாரிஸ்ட், என் தலைவர் ஆசிரியர் வீரமணி என்பது எனக்குள் ஊறிப் போய்விட்டது”, என முன்னுரையிலே அதிரடியாக, மிடுக்காக, உறுதியாக ஒருவர் பேசினார். அவர் பெயர் பாக்கியலட்சுமி. இயக்க மகளிர் சந்திப்பிற்காக மதுரையில் அவரைச் சந்தித்தோம்!
உங்களின் சொந்த ஊர் எது?
வணக்கம்! என் பெயர் பாக்கியலட்சுமி. வயது 40. மதுரை மாவட்டம் காயம்பட்டி எனது சொந்த ஊர். இது யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ளது. எனது இணையர் பெயர் பெரியசாமி. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுகிறார். அவரின் சொந்த ஊர் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி. அம்மா பெயர் பா.ஜெயமணி, அப்பா பெயர் க.பழனிச் சாமி. எனது தந்தையார் மற்றும் சகோதரர்களும் சமூகச் சிந்தனையோடு செயல்படக் கூடியவர்கள்.
பெரியார் கொள்கை உங்களுக்கு எப்போது அறிமுகம் ஆனது?
எனக்கு 2000ஆம் ஆண்டில் திருமணம் நடை பெற்றது. இணையர் அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். அதுசமயம் ஈரோட்டில் உள்ள பெரியார் இல்லத்திற்கு அடிக்கடி சென்று, நூல்கள் படித்துக் கொள்கைக்கு வந்தவர். திருமணத்திற்குப் பிறகு, நானும் குமாரபாளையம் சென்றுவிட்டேன். 10 ஆண்டுகள் அங்கு இருந்தேன். இணையர் பெரியார் கொள்கையில் இருந்தாலும் என்னிடம் பெரிதாக அதுகுறித்துப் பேசியதில்லை. நானாகவே அந்தக் கொள்கையின், குறிப்பாக அந்தக் கொள்கை யாளர்களின் சிறப்பை அறிந்து மாற்றிக் கொண்டேன்.
என்ன மாதிரியான சிறப்பை அறிந்தீர்கள்?
நான் பெண் என்பதாலும், கிராமத்தில் வசித்ததாலும் வீட்டை விட்டு வெளியில் வருவதே அரிதாகவே இருக்கும். எதற்கும் எல்லை வைத்திருப்பார்கள். கட்டுப்பாடும் இருக்கும்! இப்படியான சூழலில்தான் பெரியசாமி இணையராக வந்தார். வெளியில் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். பொது வேலை, தனி வேலை எதுவாக இருந்தாலும், வெளியில் அழைத்துச் சென்று பூமியும், வானமும் காட்டியவர் அவர்தான்! அதுமட்டுமின்றி என் சிந்தனைகளுக்கு அவர் குறுக்கிட்டதே இல்லை; தேவையற்ற, அனாவசிய கேள்விகளை நான் எதிர் கொண்டதே இல்லை! அவரின் நாத்திகம் அறிமுகமாவதற்கு முன்பே, அவரின் அணுகுமுறை எனக்குப் பிடித்துப் போனது! இப்படியான சூழலில்தான் இயக்கக் கூட்டங்கள், தோழர்கள் சந்திப்பு, ஈரோடு பெரியார் இல்லப் பயணங்கள் என ஒன்றன்பின் ஒன்றாக வந்தன!
கொள்கைக்குப் பிறகான மாற்றமாக எதைச் சொல்வீர்கள்?
எனது தனித்தன்மையை நான் உணரத் தொடங்கினேன். அதிலும் கொள்கையைப் பெற்றதும் அது இரட்டிப்பானது. குமாரபாளையத்தில் பெரியார் பிறந்தநாள் ஊர்வலங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். கருப்புச் சேலை கட்டி, பறையிசை அதிர, ஊர்வலத்தில் நடைபோட்டு, கொள்கையை முழங்கும் போது, உடலெங்கும் தன்னம்பிக்கை பரவும்! அதற்கு ஈடுஇணை கிடையாது! ஈரோடு பெரியார் இல்லத்தில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வேன். நான் 8 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். எனினும் “பகுத்தறிவுச் சிந்தனையைப் பயன்படுத்தி நிறைய கற்றுக் கொள்ளலாம்,” எனப் பிள்ளைகள் கூறுவார்கள்.
மதுரைக்கு எப்போது வந்தீர்கள்?
திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் வரை குமாரபாளைத்தில் இருந்துவிட்டு, மதுரை திரும்பினோம். உசிலம்பட்டி மற்றும் மதுரை மாநகரங்களில் குடியிருந்தோம். வாடகை வீட்டில் இருந்தால் சாமி படம் இல்லை, ஊதுபத்தி வாசம் இல்லை, சாணி தெளித்துக் கோலம் போடவில்லை என்கிற கேள்விகள், நமது இடத்தைக் காலி செய்தன. இறுதியாகச் சொந்தக் கிராமமான காயம்பட்டிக்குத் திரும்பிவிட்டோம்!
மதுரை வந்தவுடன் இயக்கத் தோழர்களுடன் அறி முகமாகி, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வோம். இணைய ருக்குச் சில நேரம் வர முடியாமல் போகும். நான் தவறாமல் சென்றுவிடுவேன். சிறு நிகழ்ச்சி என்றாலும், அது தொலை தூரத்தில் நடந்தாலும் ஆர்வமுடன் பங்கேற்பேன். ஏதாவது செய்தியைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம்! நிகழ்ச்சிகள் முடிய இரவு நேரமானாலும் யோசிக்க மாட்டேன். மதுரையில் எங்கு நடந்தாலும் தனியாகச் சென்று வருவேன். மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி தலைவராக தற்போது இருந்து வருகிறேன். பேச்சாளராக வர வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசையாக இருக்கிறது!
உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?
தமிழ்மணி என்கிற பையனும், நிலவரசி என்கிற மகளும் இருக்கின்றார்கள். மகள் மேற்படிப்பிற்காக சென்னை சென்றுள்ளார். பையன் வேலைக்காகக் காத்திருக்கிறார். இருவருமே கொள்கைப் பிடிப்போடு இருப்பவர்கள். முடக்கு வாதம் ஏற்பட்டு 5 ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டேன். அதில் 2 ஆண்டுகள் படுத்த, படுக்கையாய் இருந்தேன். இதுதான் வாய்ப்பு என உறவினர்கள் மற்றும் நண்பர்கள், “நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்வதுதான் இதற்குக் காரணம். உடனடியாகக் கோயிலுக்குப் போங்கள்”, எனக் கூறினர். ஒரு கட்டத்தில் கட்டாயப்படுததினர். நோயை விட, இது வலியை ஏற்படுத்தியது. அப்போது எனது பிள்ளைகளும், இணையரும் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இறப்பே வந்தாலும் பரவாயில்லை, நாம் நமது கொள்கையில் உறுதியாக இருப்போம். எவ்வளவோ மருத்துவம் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்திக் குணப்படுத்திவிடலாம். மீண்டும் நீங்கள் கருப்புச் சேலை கட்டி, நிகழ்ச்சிகளுக்குப் போவீர்கள். மற்றவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்”, எனத் தைரியம் கொடுத்தனர். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் குணமாகி, இப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.
தீவிரமாகக் கொள்கையில் இயங்குவதால், கிராமத்தின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
உறவினர்களின் விழாக்களை விட, இயக்க நிகழ்ச்சிகளுக்கே முன்னுரிமைக் கொடுப்பேன். இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி, நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறீர்களே எனத் தோழர்களும் பாராட்டுவர். திருமணத்தில் தாலி கட்டிக் கொண்டாலும் பின்னாளில் கழட்டிவிட்டேன். காலில் மிஞ்சியும் இருக்காது. அடிக்கடி கருப்புச் சேலையுடன் வேறு உலா வருவேன். பொறுக்குமா பிடிக்காதவர்களுக்கு? கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள், மறைமுகமாக விமர்சனம் செய்வார்கள். அதுவும் ஒரு கிராமத்தில், ஒரு பெண்ணாக, தனியாக, துணிச்சலாக, கடவுள் இல்லை என்கிற கொள்கையில் இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கோயில் வரி கொடுக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை.
போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற அனுபவம் இருக்கிறதா?
மதுரை இரயில் நிலையத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், மனுதர்ம எரிப்புப் போராட்டம், தாலி அகற்றும் நிகழ்ச்சியை ஒட்டி உசிலம்பட்டியில் நடைபெற்ற போராட்டம் எனப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். பலமுறை கைதாகி, ஒருநாள் சிறையில் இருந்துள்ளேன்.
எவ்வளவோ போராட்டங்களின் மத்தியிலும், நாத்திகர் வாழ்வில் நீங்கள் காணும் சிறப்பம்சங்கள் என்ன?
கருத்துச் சுதந்திரம், ஜனநாயகத் தன்மை என்பது நாத்திகர் வாழ்வில் உண்டு. அவரவர் வாழ்வை, அவரவர் வாழும் சூழலும் நாத்திகத்தில் இருக்கிறது. பக்கவாதம் வந்து எனக்கு மரண பயம் காட்டிய போது கூட அறிவியல் ரீதியாக சிந்தித்து, நலமாக வந்துவிடலாம் என்கிற துணிச்சலும், தன்னம்பிக்கையும் தந்தது இந்த நாத்திகம்தான்! கொள்கை சார்ந்து நமக்குப் பிரச்சினைகள் வருகிற போதும், தோழர்கள் நமக்குப் பக்கபலமாக இருப்பதும் இந்தச் சித்தாந்தத்தின் வெற்றிதான்! எனவே தெளிவாக, சரியாக யோசித்துச் சொன்னால், பெரியார் கொள்கை என்பது நமக்குப் பெரிய பலமே! மதுரையில் ஒரு திருமணத்தை ஆசிரியர் நடத்தி வைத்தார்கள். மதுரை தோழர்கள் என்னையும் மேடைக்கு வாங்க என்று அழைத்தார்கள். எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்ததாலும் நல்ல அங்கீகாரம் கொடுப்பார்கள்!
பெரியார் கொள்கையில் இருப்பதால் பிள்ளைகளைப் பொதுச் சிந்தனையோடு வளர்க்க முடிந்தது. ஆடம்பர வாழ்க்கை இன்றி, எளிய முறையில் மகிழ்ச்சியோடு இருக்க முடிகிறது. குடும்பத்தில் அனைவரும் உடல் கொடையும் பதிவு செய்ய இருக்கிறோம்!
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தும், பேசியும் இருக்கிறீர்களா?
நிறைய முறை சந்தித்து உள்ளேன். ஆசிரியர் நிகழ்ச்சியை என் வாழ்நாளில் தவறவிட்டதே இல்லை. அண்மையில் மதுரையில் நூல் வெளியீட்டு விழாவில் கூட அய்யாவைப் பார்த்தேன். உசிலம்பட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஆசிரியர் அவர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்கள். கடை வீதி வசூல் செய்வதில் நான் மிகுந்த ஆர்வம் காட்டுவேன். நிகழ்ச்சியின் நோக்கம், ஆசிரியரின் உழைப்பு ஆகியவற்றை எடுத்துக் கூறி, நன்கொடை கேட்பேன்! ஆசிரியரின் சுறுசுறுப்பு நான் விரும்பும் முக்கியமான ஒன்று. தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பேன், ஆனால் தொடர முடிவதில்லை. ஆசிரியரின் ஆதாரப்பூர்வமான, தெளிவான, எளிமையான கருத்துகள் கேட்கச் சிறப்பானவை. பெண்ணுரிமைச் சிந்தனைகள் கூடுதல் சிறப்பாக இருக்கும்!
91 வயதிலும், “யார் ஆட்சிக்கு வந்தால் என்ன?”, என்று இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். சமூகம் நிமிர்ந்து நிற்கவும், அடுத்தத் தலைமுறையை மனதில் வைத்தும், இந்தப் பணியை ஆசிரியர் செய்கிறார்கள்! “வாங்கம்மா! நல்லா இருக்கீங்களா?”, என நலம் விசாரிப்பதே முழு நிறைவாக இருக்கும். குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு, இறுதிக் காலத்தில் பெரியார் திடலுக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது!
அதேபோல எனது கிராமத்தில் தலைவரை அழைத்து, ஒருமுறையாவது கொடியேற்றிவிட வேண்டும் என்பதும் வாழ்நாள் கனவாக இருக்கிறது”, என உருக்கமாகத் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் பாக்கியலட்சுமி!
—————