அனைவருக்கும் வணக்கம். மோடியின் ‘2047-ஆம் ஆண்டு இந்தியா’ எப்படி இருக்கும் என்பதை நமக்கு காண்பித்து விட்டார்கள். மோடியின் ஆட்சியில் வெறும் உடல் உழைப்பாளிகள் மட்டுமே அதிகம் இருப்பார்கள் – தற்போது 32 விழுக்காடாக உள்ளவர்கள், இன்னும் 10 ஆண்டுகளில் 90 விழுக்காடு ஆகிவிடுவார்கள். ஆகவே தான் இப்போதே தேர்வு வினாத்தாள்களை கசிய விடுகிறார்கள். காரணம் இனி யாருமே நம்பிக்கையாக தேர்வு எழுத வரக்கூடாது என்பதற்காகத்தான்.
உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் 90 விழுக் காட்டினர் எதிர்காலத்தில் அருகில் உள்ள நீர் நிலைகள் அடங்கிய சுற்றுலாத் தலங்களுக்குக் கூட செல்ல முடியாது.
அவ்வளவு பிஸியாகி விடுவார்கள். ஆகவேதான் அவர்களுக் கான ஒரு வாட்டர் சிட்டியை உருவாக்கும் திட்டத்தின் முன்னோட்டம்தான் வட மாநிலங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை. இதை வரவேற்கிறோம் இந்தியாவின் வெனிஸ் நகரத்தில் எங்கும் தண்ணீர், சாலை வாகனங்களுக்கு பதிலாக படகுகள் பயன்படுத்தப்படும்.
சில நாட்களுக்கு முன்பு கடுமையான கோடையினால் தண்ணீர் பஞ்சத்தில் மூழ்கிய டில்லிக்கு மோடி அரசு கொடுத்த கொடைதான் டில்லி வாட்டர் சிட்டி. பொதுவாக மேலை நாடுகளில் தங்களது இல்லங்களுக்கு பின் புறம் சிறிய நீச்சல் குளம் கட்டி இருப்பார்கள். ஆனால் டில்லியில் வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம். நீங்கள் நீச்சல் அடித்துக்கொண்டே சாப்பிடலாம், படிக்கலாம் சமையல் கூட செய்யலாம்.
ஆனால், காலைக் கடன் கழிக்க மட்டும் மேடான இடம் தேடிப்போக வேண்டும். இதனால் என்ன நன்மை என்றால் வீட்டில் அனைவருமே நீச்சல் வீரர்களாக மாறிவிடுவார்கள். இனி ஒலிம்பிக்கில் நீச்சலுக்கான அனைத்துப் பதக்கங்களும் நமக்குத்தான். தரையிலும் தண்ணீரிலும் வாகனங்களை ஓட்டுவதற்கான சோதனைக் களமாக்குவது சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் புதிய திட்டமாக
இருக்கலாம். காரணம் அவர் தான் தன்னுடைய சிறுநீரைச் சேகரித்து தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தினார்(இது அவரே கூறியது).
சாங்காய் விமான நிலையத்தில் செயற்கை நீரூற்றை வைத்தார்கள். ஆனால் மோடி அரசோ இயற்கை நீரூற்றை வைத்து சங்கி விமான நிலையம் என்பதை உறுதி செய்துள்ளார்கள். இது போன்ற ஒரு அனுபவத்தை இந்தியாவிற்கு வந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். விமான நிலையம் அனைத்து நாடுகளுக்கும் மக்களைக் கொண்டு செல்லும் ஒரு பயண மய்யமாகும். ஆனால், டில்லி, ஜபல்பூர், போபால், ராஜ்கோட், லக்னோ உள்ளிட்ட விமான நிலையங்களோ பயணச் சீட்டு எடுக்காமலேயே அதன் கூரையின் கீழே நிற்பவர்களை கொண்டு சென்றுவிடும். இதில்
ஒரே ஒரு குறை என்னவென்றால் சென்றவர்கள் மீண்டும் திரும்ப மாட்டார்கள். அவர்களின் பயணத்திற்கு அரசே பணமும் கொடுக்கும். அதாவது பயணித்துச் சென்றவர்களின் குடும்பத்திற்கு… தேசவிரோத சக்திகள் டில்லியில் ஏற்பட்ட ஜலதாராவை வெள்ளம் என்று எழுதுவார்கள். டில்லியின் வளர்ச்சி அவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. உண்மை என்னவென்றால் எதிர்காலத்தில் டில்லி தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படாமல் இருக்க டில்லி நகரைச் சுற்றி கரையை எழுப்பி டில்லியை தண்ணீரில் மிதக்க விட்டுள்ளார்கள்.
டில்லி மருத்துவமனைகளின் தரைத்தளம் ஏன் தண்ணீரால் நிரம்பி உள்ளது என்ற கேள்விக்கு பதில் ஸ்டெரச்சரில் வைத்து நோயாளிகளை தூக்கிச்செல்ல மிகவும் சிரமப்படவேண்டும். அதற்கு மாற்றுதான் தரைதளத்தில் தண்ணீரில் நோயாளியை ஒரு காற்றடைத்த டியூபில் வைத்து மிதக்கவிட்டால் தானாகவே சென்றுவிடுவார் சேரவேண்டிய சிகிச்சை அரங்கிற்கு.
தமிழ்நாட்டில் திற்பரப்பு என்றால் டில்லியின் திற்பரப்பு அருவி செங்கோட்டை ஆகும். செங்கோட்டை கட்டிய ஷாஜகான் கூட எதிர்காலத்தில் செங்கோட்டை அருவியாக மாறும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். செங் கோட்டையில் இனி, ஒளி மற்றும் ஒலி காட்சிகளை மட்டுமல்ல, ஒரு மினி நீர்வீழ்ச்சியையும் கண்டு ரசிக்கலாம். மோடியின் 3.ஓ இந்தியாவில் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நீர் வீழ்ச்சிகளைக் காணலாம். மறக்காமல் குடையைக் கொண்டு செல்லுங்கள், இல்லையேல் அருவியில் நனைந்து ரசியுங்கள்.
இது மட்டுமின்றி உலகின் முதல் ரயில் நீர் வீழ்ச்சியையும் இந்திய ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் ஓடும் ரயிலில் நீர்வீழ்ச்சி வழியாகச் செல்கிறீர்கள் என்று தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் பல ஊர்களில் புதிய நீர் விளையாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. காருக்குள்ளே நீர் ஓடும். இதனால் காரைக் அவ்வப்போது கழுவ அவசியமில்லை. வேண்டுமென்றால் பாத்திரத்தை கொண்டுபோய் காரிலேயே குளித்துவிட்டு நேராக அலுவலகத்திற்குச் செல்லும் வசதிகளுக் கான முன்னோட்டம் செய்யப்பட்டு வருகிறது.
பிரகதி மைதான சுரங்கப்பாதை என்பது டூ இன் ஒன்னாக மாற்றப்பட்டுள்ளது. காரிலும் செல்லலாம் – மழைக்காலம்
வந்தால்ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு சென்று ஆழ்கடல் டைவர் போல சுரங்கப்பாதையில் தண்ணீருக்குள்ளும் செல்லலாம். அந்த அளவிற்கு திறம்பட உருவாக்கிய சுரங்கப் பாதை ஆகும். ஏற்கெனவே அங்கு நீர் மூழ்கிப் படகுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தாஜ்மகால் தான் அதிசயம் என்று கூறுவார்கள் பொதுவாக பெரிய பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் அதன் வழியாகச் செல்லும் – ஆனால் தலைநகர் டில்லியில் நீண்ட நீண்ட குழாய்கள் தண்ணீர் வழியாக செல்கிறது, எங்கு செல்கிறது
என்று அதனை மிதக்க விட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் தான் இதுவும் ஒரு உலக அதிசயம். விரைவில் தலைநகர் டில்லியை நீர் நகரம் என்று உலக நகரங்களின் பட்டியலில் யுனஸ்கோ சேர்க்கும் என்று நினைக்கிறோம். இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் அசாம் முதலமைச்சரின் சார்பில் பாஜகவினர் கோரிக்கை வைக்கலாம். காரணம் அசாம் முதலமைச்சர் இவ்வாறு கோரிக்கை வைப்பதில் முக்கியமானவராவர். டில்லியில் இவ்வளவு தண்ணீர் இருப்பதைப் பார்த்து, யுனெஸ்கோ டில்லிக்கு உண்மையான ஏரி நகரம் என்ற பட்டத்தை வழங்கக்கூடும்.
அரித்வாரில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருக்கின்றனர். என்னவென்றால் நீங்கள் காரில் இருந்து இறங்கி ஆற்றை ரசிக்கத் தேவையில்லை. ஆறே உங்களை
தனது ஓட்டத்தில் இட்டுச்செல்லும். இது ஒரு இனிமையான பயணமாக இருக்கும். ஆனால் அதுவே கடைசிப் பயணமாக இருக்கும் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஆறு, கடல், குளம் என்று எதுவுமே இல்லாத மோராதா பாத் என்னும் உத்தரப்பிரதேச நகரில் படகு விடுகிறார்கள் என்றால் நாடு எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழ்நாடு அரசு நிலத்தடி நீர் சேகரிப்பு குறித்து பள்ளிப் பாடங்களில் கூட அதிகம் எழுதியுள்ளார்கள். ஆனால் குஜராத் மாடல் மிகவும் வியப்பானது. சாலையின் மத்தியிலேயே தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார்கள். அது தமிழ்நாட்டைவிட
அதிகமாக நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கு குஜராத் மாடல் அரசு கொடுத்துள்ள நவீன டெக்னாலஜி ஆகும். இதை உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
இறுதியாக இதுதான் வட இந்தியாவைத் தொட்ட முதல் மழை, கிருஷ்ணன் பிறந்த துவாரகை நீருக்கு அடியில் இருப்பதால் ராமனும் தனது ஊரான அயோத்தியை நீருக்கு
அடியில் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார். இனி வரும் மழைக்காலங்களில் இன்னும் நிறைய பார்க்கலாம்.
இறுதியாக வள்ளுவன் கூறியதுதான்…
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்…”
ஆம்! மோடியின் மூன்றாவது கட்ட ஆட்சியில் பல இடுக்கண்கள் விளைந்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். அதற்குப் பழகிக் கொள்ளுங்கள்.