புதுடில்லி, ஜூன் 30 பீகார் மாநிலத்துக்கு ஒன்றிய அரசு சிறப்புப் பிரிவு தகுதியை வழங்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு தகுதியை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ் குமார் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றி யத்தில் ஆட்சி அமைத்துள் ளது. மேலும் அய்க்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக அய்க்கிய ஜனதா தளம் விளங்குவதால் மீண்டும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள அய்க்கிய ஜனதா தள தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் டில்லியில் நடை பெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் இதுகுறித்து அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: பீகாருக்கு சிறப்பு தகுதி என்ற கோரிக்கை இப்போது உருவானதல்ல. பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும், பீகார் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும்
இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இதைவலியுறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல.
மேலும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்தும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. நாட்டில் முக்கியமான போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்தல், தேர்வு தகுந்த முறையில்செயல்படுத்தப்படுகிறது என்பதில் பெற்றோர், மாண வர்களின் நம்பிக்கையை நிலை நிறுத்துதல் கட்டாயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.