பிறந்த நாள் சிந்தனை (26.8.1883) தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும் புலவர் சு.கந்தசாமி

Viduthalai
5 Min Read

கட்டுரை, ஞாயிறு மலர்

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வேறொருவருடன் இவ்வளவு நட்புடன் இருந்தது இல்லை.1917 முதல் 1953இல் திரு.வி.க. மறையும் வரை முரண்பட்ட நேரத்தில் கூட நட்பாய் இருந்தார்கள் . மிகக் கடுமையாகக் கூட தாக்கிப் பெரியார் எழுதிய போதும் மென்மையாகவே பதில் தருவார் திரு.வி.க.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த பெரியாரைப் பார்க்கத் திரு.வி.க வரும் பொழுது பெரியார் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீரை உகுக்கின்ற அளவுக்கு நட்பில் இருவரும் இணைந்துள்ளனர். பலரும் பார்க்கவந்த போதும் கலங்காத பெரியார் திரு.வி.க வருகையின் போதே கலங்குகின்றார்.

ஒருமுறை திரு.வி.க உடல் நலமின்றி இருந்த போது பெரியார் பார்க்கச் செல்கிறார். அப்போது திரு.வி.க., மறைமலையடிகள் உடல்நலமின்றி இருக்கிறார். பார்த்து வாருங்கள் என்றவுடன் பார்க்கச் செல்கிறார் பெரியார்.  மறுநாள் மறைமலை அடிகளார் (15.9.1950) மறைகிறார்.

1942க்குப் பிறகு நடந்த  திராவிடர் கழக மாநாடுகள், திருக்குறள் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் திரு.விக.கலந்து கொண்டுள்ளார்.”வாழ்க்கைக்  குறிப்பு நூலை 1944 ஆம் ஆண்டே திரு.வி.க. எழுதி விட்டார்.இதன் பிறகும் ஒன்பது ஆண்டுகள் திரு‌. வி.க. வாழ்ந்துள்ளார். எனவேதான் அவரது தேசிய இயக்கப் பணிகளை, தொழிற்சங்கத் தொடர்புகளைச் சொல்லும் ஆய்வாளர்கள் திராவிடர் இயக்கத் தொடர்புகளைச் சொல்லவில்லை ” என்று பத்திரிகை ஆசிரியர் ப.திருமாவேலன் பதிவு செய்கிறார்.

கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு 14.09.1947இல் நடந்த போது திரு.வி.க.வே பெரியார் படத்தைத் திறந்து வைத்து

” திராவிடப் பெருமக்களின் தலைவன் எனது பழைய நண்பரும் உழுவலன்பனு மாகிய இராமசாமிப் பெரியார் படத்தைத் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர் ஓர் இயற்கை ஞானி என்றுதான் கூறவேண்டும். பெரும் பெரும் காரியங்களை எல்லாம் எளிய முறையில் சாதிக்கும் திறமை இவரிடம் ஆரம்பத்தில் இருந்தே காணப்பட்டு வந்தது.மனோதத்துவ ஆய்வின்படி இப்பெரியாரின் புற உறுப்புகளை நோக்கினால் அஞ்சாமை சாயல் இவருடைய கண்ணொளியில் பொலிவதைக் காணலாம். இந்தியா எங்கும் ஏன் உலகமெங்கும் கூட இந்த ஆகஸ்ட்15 ஆம் நாள் இந்திய சுதந்திர விழா  கொண்டாடப் பட்ட காலத்தில் “நாம் எதிர்பார்த்த சுதந்திரம் அல்ல இது . சுரண்டல் சக்கரத்துடனும் சர்வாதிகார சக்கராயுதத்துடனும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சியைத் துவங்கும் நாள் தான் இது ” என்று கட்டளையிட்டார்.தன் மனசாட்சிக்குத் தோன்றியதை யார் என்ன கூறினாலும் தனக்கு லட்சியமில்லை என்று வெளியிட எவ்வளவோ அஞ்சாமை வேண்டும்.அஞ்சாமை உள்ள இடத்தில் உண்மை இருக்கும்.உண்மை உள்ள இடத்தில் தான் அஞ்சாமை பிறக்க முடியும்” என்று பேசினார். 

அதுபோல் 1948 அக்டோபரில்  ஈரோட்டில் நடந்தபோது திரு.வி.க.வே திராவிட நாடு படத்தைத் திறந்துவைத்துக் கீழ்வருமாறு பேசினார்.

“இந்நாட்டு மக்கள் எல்லாருமே திராவிடர்கள் தான்.என்றும் நானும்  திராவிடன் தான்.அதனால் திராவிட நாடு படத்தை திறந்து வைப்பதில் தவறு இல்லையே என்ற முடிவுக்கு நான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு திராவிடம் பற்றித்தான் ஆயிரம் பக்க அளவில் ஒருபுத்தகம் எழுத இருக்கிறேன் என்றார். 

திராவிடம் என்ற சொல்லுக்கான விளக்கத்தை திரு.வி.க. விவரிக்கிறார். ‘திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதங்களே போதும்’ என்று அடுக்குகிறார்.

இந்தியாவில் இருப்பது ஆரியம், திராவிடம் என்ற இரு கலாச்சாரங்கள் மட்டுமே, திராவிட நாடு வளமானது, திராவிட நாடு பிரிந்தால் தான் தொழிலாளர் வாழ்வு வளம் பெறும், திராவிடர் கழகம் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெறும் போதுதான் தொழி லாளர் வாழ்வு மலரும். ஆரிய மாயை அகற்றி திராவிடத்தில் மறுபடியும் புத்து ணர்ச்சியை உண்டாக்கப் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்துக்கு நீங்கள் யாவரும் தன்மான தமிழ்மகன் ஒவ்வொருவனும் உரிமை கொண்ட தொழிலாளர் தோழனும் உதவி புரிதல் வேண்டாமா?” என்று கேட்ட வர் திரு.வி.க.

இதைத் தொடர்ந்து  31.10.1948 அன்று சென்னை ஜிம்கானா மைதானத்தில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் திரு.வி.க. இக்கூட்டத் தில் பேசும்போது, ‘நமது குறிக்கோள், நமது முடிவான லட்சியம் திராவிடநாடு, திருவிட நாடு, திரவிடநாடு தான்’ என்றும் முழங் கினார். உலக சமதர்ம இயக்கத்துக்கு துணை புரிவது தான் திராவிடர் கழகம் என்றும் கூறினார். ‘பரத கண்டம் பேசிய நான் திரா விட நாடு கேட்பதால் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சிலர் கேட்பதாக சொல்லிக் கொண்டார் திரு.வி.க.

”இனி யாவரும் ஈரோடு காட்டும் வழி, ஈரோட்டுப் பெரியார் காட்டும் வழி நடந்து வர வேண்டியதுதான். திராவிட நாடு திரா விடருக்கே’ என்று தனது பேச்சை முடித்தார்.

1949 மே 1 அன்று சென்னையில் திரா விடர் கழகம்  நடத்திய  மே தினக்கூட்டங் களில் திரு.வி.க. பங்கெடுத்தார். 1953 செப் டம்பர் மாதத்தில் திரு.வி.க.வின் பிறந்த நாளைக் கொண்டாடினார் பெரியார். திரு. வி.க. படத்தை பெரியார் திறந்து வைத்துப் பேசினார். 13.9.1953 அன்று இந்த விழாவை பெரியார் நடத்தினார். 17.09.1953 அன்று திரு.வி.க. மறைந்தார். தனது நண்பருக்காக அவர் உடல் தாங்கிய ஊர்வ லத்தில் சென்ற பெரியார் அவர்கள், இறுதி நிகழ்ச்சிகளில் முழுமையாக அமர்ந்து இருந்தார். அதன்பிறகு நாடு முழுவதும் திரு.வி.க.வுக்கு இரங்கல் கூட்டங்களை நடத்தியது திராவிடர் கழகம்.

“பெரியார் என்றால் திரு.வி.க.

திரு.வி.க. என்றால் பெரியார்”

என்று சொல்வது இதனால் தான்!

(‘விடுதலை’ – ஞாயிறு மலர் – 7.9.2019)

திரு.வி.க. அவர்கள் தம் 73ஆம் வயதில் மரணமடைந்தார்.விடுதலை தலையங்கம்  தீட்டுகிறது.

திரு.வி.க. முடிவு

பெரம்பூர் பாரகனில் உள்ள லேபர் யூனியன் கட்டடம் கொண்டு போகப் பட்டு பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியது ஊர்வலம். பெரியார் ஈரோட்டி லிருந்து காரில் பிற்பகல் மூன்று மணிக்கு வந்து சேர்கிறார்..

“சென்னை நகரே கண்டிராத பிரமாண்டமான ஊர்வலம். பெரியார் தலைமையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பின் தொடர்ந்தனர்.   பின்னால் சட்டமன்ற உறுப்பினர் அந்தோணிப் பிள்ளை தம் மனைவியுடன் தொடர பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் சொரிய ஊர்வலம் சிந்தாதிரிப் பேட்டையை அடைந்தது.

நல்லமழை. என்றாலும் கூட்டம்  சிறிதும் கலைய வில்லை.கடல்போல் பெருகியது. எல்லாத் துறை மக்களும்,  கருப்புச் சட்டை அணிந்த கழகத் தோழர்களும்,  பட்டாளி மக்களும்,  தொழிலாளர் சங்கத்தாரும் கலந்து கொண்டனர். ஏழு மணிக்குச் சுடுகாடு அடைந்தது.  பிரபல காங்கிரஸ் காரர்களோ உயர்தர சர்க்கார் அதிகாரிகளோ இல்லை.காரியதரிசி பரமேஸ்வரன் மயானம் வந்து மாலை போட்டார். திரு.வி.க விருப்பப்படி சடங்குகளின்றி தகனம் செய்ய மு.வ கூறினார்.  பெரியார், மு.வ, அந்தோணிப்பிள்ளை முன்னிலையில் திரு.வி.க.வின் பெரியப்பா மகனும் சி.அய்.டி யுமான பாலசுப்ரமணியத்தாலும் மற்றவர்களாலும் தீ மூட்டப்பட்டது. திருவாசகப் பாடல் ஓதப்பட்டது. திரு.வி.க புகழ் ஓங்குக என்று முழக்கமிடப் பட்டது. இரங்கல் கூட்டம் ஏற்பாடு இல்லாததால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினர்.

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக் கொருமுறை தோன்றும் பெருந்தகையின் உலக வாழ்வின் கடைசி சின்னங்களை இரவு ஏழு மணிக்குத் தீ ஜ்வாலைகள் சிதைத்துக் கொண்டிருந்தன”.

(‘விடுதலை’ நாளிதழ் – 19.09.1953)

வாழ்க நட்பு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *