புதுடில்லி. ஜூன் 20- ‘எதிர்க்கட்சிகளின் பிரதி நிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், நாடாளுமன்றத்தை இனி சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது; நாடாளு மன்ற விவாதங்களில் அனல்பறக்கப் போகிறது’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அக்கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை.
காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. கடந்த 2 தோ்தல்களை ஒப்பிடுகையில் எதிரணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா சிறீரீநாத், டில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘இந்தியா’ கூட்டணி சார்பில் விவாத திறன்மிக்க பெரும் தலைவா்கள் இப்போது நாடாளுமன்றத்துக்கு தோ்வாகியுள்ளனா். இதனால், நாடாளுமன்ற விவாதங்களில் அனல்பறக்கப் போகிறது. பாஜகவுக்கு எனது ‘அனுதாபங்கள்’.
எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் வலுப் பெற்றுள்ளதால், முந்தைய காலங்களைப் போல் நாடாளு மன்றத்தை சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது.
மக்களவை துணைத் தலைவா் பதவியை ‘இந்தியா’ கூட்டணி கோருமா? என்பது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, இதர கூட்டணித் தலைவா்கள் முடிவெடுப்பா்” என்றார் அவா்.
மக்களவை அமா்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை அமா்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு உரையாற்றவுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பெயரில்
போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேர் கைது!
புவனகிரி, ஜூன் 20- சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலை. பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பிரபாகர், சிதம்பரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அதில், ‘பல்கலைக்கழக துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் மாணிக்கம், பிரிவு அதிகாரி சேகர் ஆகிய இருவரும் கடந்த 18ஆம் தேதி சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தின் பாலம் அருகே நடைப்பயிற்சி சென்ற போது அங்கு பல்கலைக்கழக சான்றிதழ் கிடைத்ததாகவும், அது குறித்து சரிபார்த்தபோது அவை அனைத்தும் போலி என தெரிய வந்ததாகவும், அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் ஏ.எஸ்.பி.ரகுபதி மற்றும் குற்றப் பிரிவு தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த தீட்சிதர் சங்கர் (29), சிதம்பரம் மீதிகுடி மெயின் ரோடு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த நாகப்பன்(50) ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்தது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் பிடித்து, சான்றிதழ் கிடைத்த இடம் கிள்ளை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் கிள்ளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில், கிள்ளை காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரில் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து, சான்றிதழ் தயாரிப்பதற்காக பயன்படுத்திய அச்சு இயந்திரம், மடிக்கணினி, அலைபேசி, ஹோலோ கிராம் ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருள்களை கிள்ளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் 339 விழுக்காடு
மழை அதிகம்!
சென்னை, ஜூன் 20- சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஜூன் மாதத்தில் இதுவரை இயல்பை விட 339 சதவீதம் மழை அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதில் சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னையில் ஜூன் 1 முதல் – 19ஆம் தேதி வரை சராசரி மழை அளவு 39.6 மிமீ ஆகும். ஆனால் நிகழாண்டு ஜூன் மாதத்தில் இதுவரை 173.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பை விட 339 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.