தொடரும் பாதுகாப்பு அதிகாரிகளின் மரணம்
பைசாபாத், ஜூன் 20 அயோத்தி ராமன் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 25 வயது காவலா், தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். தவறுதலாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக உத்தரப்பிரதேச காவல்துறைத் தலைவா் பிரவின் குமார் கூறியதாவது:
அயோத்தி ராமன் கோவிலில் சிறப்பு பாதுகாப்புப் படை காவலா் சத்ருகன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தார். ராமன் கோயிலின் கருவறையில் இருந்து 150 மீ தொலைவில், கோட்டீஸ்வா் கோவில் எதிரே உள்ள விஅய்பி கதவின் அருகே அவா் பணியில் இருந்தார். இந்நிலையில், நேற்று (19.6.2024)அதிகாலை 5.25 மணிக்குத் துப்பாக்கியால் சுட்டு அவா் உயிரிழந்தார். துப்பாக்கி தவறுதலாக வெடித்ததா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. உடல்-கூராய்வுக்குப் பிறகே தெளிவான தகவல் கிடைக்கும் என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமன் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியும் இதேபோல் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமன் கோவில் கட்டி திறப்பு விழாவிற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் போதே பாதுகாப்புப் பணியில் இருந்த சில அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். இன்றுவரை அவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு இறந்தார்களா? அல்லது வேறு யாரேனும் அவர்களைக் கொலை செய்தார்களா என்ற விவரம் தெரியவில்லை.
அயோத்தி நகரைப் பொறுத்தவரை பல்வேறு மடங்கள் உள்ளது அங்கு பல சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதும் போட்டியாக மடத்தின் முக்கிய நபர்கள் சாமியார்கள் என தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமன் கோவிலில் தொடரும் இந்த உயிரிழப்புகளுக்கும் சமூகவிரோதக் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்று கேள்விகள் எழுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் வழக்கில் கொலையா தற்கொலையா என்று முடிவு செய்யாத நிலையில் மீண்டும் ஒரு கொலை நடந்துள்ளது.