அதானியோடு மோடிக்கிருந்த நட்பு முறிந்து விட்டதா?

Viduthalai
5 Min Read

கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய அதானிக்கு எந்தத் தொழில் அனுபவமுமே இல்லை.
ஆனால் அவரிடம் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பெரிய விமான நிலையம், ஒட்டுமொத்த வர்த்தக கைமாற்றம் செய்யப்படும் துறைமுகங்கள் என அனைத்தும் அதானி வசமே…..
பிரதமர் நரேந்திர மோடிக்கும் கவுதம் அதானிக்கும் இடையேயான நெருக்கம் நீண்டது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டே இது. விவாதத்தில் உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி மோடி அரசுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது
அகமதாபாத்தில் ஜவுளித் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கவுதம் சாந்திலால் அதானி
1980களிலேயே கல்லூரிப் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, சொந்த ஊரான அகமதாபாத்தை விட்டு மும்பைக்குச் சென்று வைர வியாபாரி ஒருவரோடு கூட்டுச் சேர்ந்து வைர வியாபாரத்தில் இறங்கினார். ஆனால் முன் அனுபவம் இல்லாததால் தனது வைர வியாபார நண்பரையும் பெரும் இழப்பில் தள்ளிவிட்டு, தான் மீண்டும் அகமதாபாத் சென்று 1988-ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகித்து வந்தார். பின்னர் தனது சகோதரனின் நிறுவனத்தைத் தனது பெயரில் மாற்றி அதானி எண்டர்பிரைசஸ் என்ற ஒன்றை உருவாக்கினார்.
1994-இல் இந்திய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தைப் பட்டியலிட்டார். அங்கிருந்துதான் மோடிக்கும் அதானிக்குமான உறவு தொடங்குகிறது.

மிகவும் குறுகிய காலத்திலேயே அதாவது 1995-இல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை முதலமைச்சராக இருந்த மோடி நேரடியாகவே நீர் வழிப் போக்குவரத்து துறை அமைச்சரகத்தில் சிபாரிசு செய்து வழங்கினார். அதன் பிறகு மோடி பிரதமராக வந்த பிறகு ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்க ஒப்பந்தம், விவசாய கொள்முதல் ஒப்பந்தம், அரபு நாடுகளுடனான சரக்கு கையாளும் ஒப்பந்தம், இலங்கையுடனான காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தம் என உலகத்தில் உள்ள இரண்டாம் கட்ட நாடுகளில் பெரும்பாலான வணிக ஒப்பந்தங்களை வளைத்து வளைத்துப் பெற மோடி பேருதவியாக இருந்தார்.
அதானி குழுமம் நாட்டில் உள்ள அனைத்துப் பெரிய விமான நிலையங்களையும் பராமரிப்புப் பணிக்கான ஒப்பந்தத்தில் எடுத்தது . இதன் மூலம் அது நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய கார்ப்பரேட்டராக ஆனது.
இந்த ஒப்பந்தத்தின் போது மோடி அதானி குழுமத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார், இதற்கு முன் அதானி குழுமத்திற்கு விமான நிலையத்தை இயக்குதல் மற்றும் நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை. முந்த்ராவில் விமான ஓடுதளத்தை இயக்குவதில் ஆரம்பித்து, நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்கும் தனியார் வளர்ச்சி நிறுவனமாக ஆவதற்கு அதானி குழுமத்திற்கு வெறும் 24 மாதங்களே ஆனது.

2019 ஆம் ஆண்டில், அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கான ஒப்பந்தங்களை கவுதம் அதானியின் நிறுவனம் பெற்றது. பொருளாதார விவகாரங்கள் துறையும் (நிதி அமைச்சகத்தின் துறை) மற்றும் நிட்டி ஆயோக் அமைப்பும், விமான நிலைய ஒப்பந்தங்களையும் அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன என்று 2021 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
“இந்த துறையில் அனுபவம் இல்லாததால் நட்டம் ஏற்படலாம். இந்தத்திட்டம் மீது தாக்கம் ஏற்படுவதோடு கூடவே விமான நிலையத்தில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தையும் அது பாதிக்கலாம்.” என்று நிட்டி ஆயோக் கூறியது, ஆனால் அதுகுறித்து எதுவும் வெளியே சொல்லக்கூடாது என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதே போல் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தகம் மேற்கொள்ளும் துறைமுகங்கள் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கான நாடு முழுவதும் சிறப்பு ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.

நாட்டின் எந்த மூலைக்கும் உற்பத்திப் பொருட்கள் நேரடியாக அதானி துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டு – கொண்டு செல்லப்படும் வகையில் உருவாக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பயணிகள் ரயில்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டன. பல ரயில்களை மாற்றுப்பாதையில் செல்லவைத்தனர். இதனால் ரயில்வேக்கு நேரம் மற்றும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது
லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் 2023ஆம் ஆண்டு பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமம் தொடர்பாக நரேந்திர மோடி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். உலகத் தர வரிசையில் 609ஆவது பெரிய பணக்காரராக இருந்த கவுதம் அதானி கடந்த 3 ஆண்டுகளில் 2ஆவது பெரிய பணக்காரராக மாறிவிட்டார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவருக்கு நல்ல உறவு இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட 5 மில்லியன் டன் லித்தியம் இருப்பு மற்றும் அதன் ஏல அறிவிப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் அதானி குழுமத்தை சுட்டிக் காட்டினார்.

“அதானி பங்கேற்கும் ஒவ்வொரு ஏலத்திலும் அவர் வெற்றி பெறுவார் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். வணிகத்தில் நுழைவதற்கு அவருக்கு அனுபவம் தேவையில்லை. அதனால் லித்தியம் இருப்பு அதானிக்குக் கிடைக்கும் என்று என்னால் ஆருடம் சொல்ல முடியும்” என்றார் ராகுல் காந்தி.
மோடி பிரதமர் ஆன பிறகு இந்தியாவின் மிகப்பெரிய தனியார்த் துறை நிறுவனங்களில் ஒன்றாகி இன்று உலகப் பணக்கார வரிசையில் அதானியை முதல் அய்ந்து இடத்திற்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் மோடி.
அதானிக்குச் சொந்தமான விமானத்தில் பறப்பார் பிரதமர் மோடி. வெளிநாட்டுக்குக்கூடவே அதானியைக் கூட்டிச் சென்று அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் அதானி, அம்பானிகளுக்குக் கிடைக்கச் செய்ய பிரதமரே முன்கரம் நீட்டுவார். வங்கி அதிகாரிகளையும் உடன் கூட்டிச் சென்று கடன் வழங்கிடவும் ஏற்பாடு செய்வார் பிரதமர் மோடி!
இதனால் மோடி – அதானி – அம்பானி கூட்டு உலகம் அறிந்த ஒன்றாகி விட்டது.

நாடு கார்ப்பரேட்டுகளின் கைக்குச் சென்று விட்டது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அடித்த அந்தர்பல்டி அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்து விட்டது.
அதானி, அம்பானிகள் ராகுலுக்குக் கூட்டாளிகள், காங்கிரஸ் கட்சிக்கு அதானி வேனில் கொண்டு வந்து பணத்தைக் கொட்டுகிறார். அதனால் தான் அண்மைக் காலமாக அதானி பற்றியெல்லாம் ராகுல்காந்தி விமர்சிப்பதில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் குற்றப் பத்திரிகை படித்தாரே, பார்க்கலாம்.
செய்தியைப் படித்தவர்களுக்கு – மோடி என்ன ஆனார்? தோல்வி பயத்தில் எதை எதையோ பேசுகிறாரே என்ற பேச்சு இப்பொழுது பேசு பொருளாகி விட்டது. ஆக மோடி தலைமையிலான கட்சி தோல்வி ஜன்னியில் பிதற்றுகிறது என்பது மட்டும் உண்மை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *