தூத்துக்குடி,ஜன.6- தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இவ்விழாவை 4.1.2024 அன்று வெளிநாட்டினர் தூத்துக்குடி அருகே கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ”ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்’ என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தது. 16ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய 6 நாடு களைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 37 சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். அவர்கள் 17 ஆட்டோக்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட் டனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே ஆட்டோக் களையும் ஓட்டிச்சென்றனர்.
பொங்கலிட்டு மகிழ்ந்தனர்
கடந்த 28ஆம் தேதி சென்னையில் இருந்து ஆட்டோக்களில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம் வழியாக தூத்துக்குடிக்கு 3.1.2024 அன்று மாலையில் வந்தனர். பின்னர் அவர்கள் 4.1.2024 அன்று காலையில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சாயர்புரம் அருகே தனியார் பண்ணை தோட்டத்துக்கு சென்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து அசத்தலாக வந்த வெளிநாட்டினருக்கு கிராம மக்கள் நெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 10 மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதற்காக அவர்களே அடுப்புகளில் பனை ஓலைகளால் தீ மூட்டினர். புதுப்பானைகளில் பச்சரிசி, சர்க்கரை போன்றவற்றை போட்டு பொங்கலிட்டனர். பானைகளில் பொங்கல் பொங்கி வழிந்தபோது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ததும்ப குரல் எழுப்பி குலவையிட்டனர்.
தொடர்ந்து சர்க்கரை பொங்கலை சுவைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர், சுவையான பொங்கலை சமைத்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். பின்னர் சிறுதானியம், கேழ்வரகு, கம்பு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு களையும் ருசித்தனர்.
தமிழர்களின் கலாச்சாரம் எங்களை கவர்ந்தது
பொங்கல் வைத்தது குறித்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ”தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொங்கல் விழாவை கொண்டாடியது வித்தியாசமான அனுபவத்துடன் உற்சாகத்தை தந்துள்ளது” என்றனர்.