திராவிடக்கலை மேற்குலகை அலங்கரிக்கிறது

viduthalai
1 Min Read

சிந்து வெளி மற்றும் தெற்கே வைகை, பொருநை நதிக்கரைகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திராவிட மக்களின் சிற்ப, ஓவியக் கலைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் தலைமுறைகளால் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
சிந்துவெளியில் கிடைத்த தாடியுள்ள மனிதன் சிலை, கீழடியில் கிடைத்த அழகிய தலை அலங்காரத்துடன் கூடிய பெண்ணின் சிலையை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
இந்தக்கலையின் பிறப்பிடம் இந்தியா என்பதற்கு 2017 ஆம் ஆண்டு கீழடியில் கிடைத்த பெண்ணின் சிலை சான்றாக உள்ளது.
இங்கிருந்துதான் இந்தக்கலை யவனர்களிடமும் அதன் பிறகு ரோமர்களிடமும் சென்றது. நைல்நதி நாகரீகத்தில் சிலைகள் பல செதுக்கப்பட்டாலும் நுணுக்கமாக தலைமுடிச்சுருள்கள் தாடி முடிகள் போன்றவற்றில் எகிப்திய சிலைகளுக்கும் திராவிட கலையில் வந்த சிலைகளுக்கும் வேறுபாடு உண்டு.
சிந்துவெளிநாகரிகத்தில் கிடைத்த தாடி மனிதனின் சிலையில் உள்ள அதே நுணுக்கங்கள் தான் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பெசாவர், தக்சசீலாம், காபிசாம், பூஷ்கால்வதி, பாமியா, காபூல், கந்தகார் பகுதிகளில் கிடைத்த புத்தர் சிலைகளில் உள்ளது
கந்தகாரில் உள்ள புத்தர் சிலைகள் வெள்ளை மற்றும் கருங்கற்களால் செய்யப்பட்டது,
கந்தகாருக்கும், பாடலிபுத்திரத்திற்கும்(பட்னா) மதுரைக்கும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுகள் இருப்பினும் இந்த மூன்று இடங்களிலும் வாழ்ந்த மக்கள் ஒரே இனமாக கலாச்சாரத்தை பாதுகாத்து வந்துள்ளனர். வடக்கே ஆரியர்களின் வருகை அவர்களின் கங்கைச் சமவெளி குடியேற்றம் போன்றவை அந்தக் கலையை அழித்தொழித்துவிட்டது. ஆனால் தெற்கே பவுத்தமும் சமணமும் அந்தக் கலையை உயிர்பித்து வைத்திருந்தன. அதன் பிறகு சைவம், வைணவம் வந்த பிறகும் அந்தக் கலை மேலும் புத்துயிர்பெற்று இன்றும் உயிர் வாழ்கிறது. இந்தக் கலையைத்தான் அலெக்சாண்டருடன் வந்தவர்கள் தங்களோடு கிரேக்கத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அய்ரோப்பாவில் காணப்படும் அழகியல் கலைநுணுக்கம் கொண்ட சிலைகள் அனைத்தும் சிந்து மற்றும் வைகை, பொருநை நதிக்கரை நாகரீகத்தின் கலைச் சிதறல்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *