ஜெயங்கொண்டம், ஆக.25- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22.8.2026 (சனிக்கிழமை) அன்று 21ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு விழா காலை 9.30 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்க, பள்ளியின் முதல்வர் ஜான் பிரிட்டோ தலைமையேற்றார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மருத்துவர்
வி.டி.ரிகாஷ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மேலும் சி.காமராஜ் பொதுக்குழு உறுப்பினரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினருக்கு டி.கிருஷ்ண குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து LKG, UKG, முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் முன்வர அவர்களைத் தொடர்ந்து ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண அணிகளின் கம்பீரமான அணிவகுப்பு கண்களைக் கவர்ந்தது. சிறப்பு விருந்தினர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து, அமைதியின் அடையாளமாக சமாதான புறாக்களைப் பறக்கவிட்டு, கொடியேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர் தன்னுடைய சிறப்புரையில் நான் இன்று இந்த மேடையில் ஒரு மருத்துவராக நிற்பதைவிட, இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவனாக நிற்பதையே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.
நான் கல்வி கற்ற இந்தப் பள்ளியின் மைதானத்தில், ஒரு காலத்தில் மாணவனாக ஓடிய கால்கள்… இன்று அதே மைதானத்தில் சிறப்பு விருந்தினராக நிற்பது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்.
ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றுவது புத்தகங்கள் மட்டுமல்ல;
ஆசிரியர்களின் வழிகாட்டுதல், பெற்றோரின் அன்பு, பள்ளியின் ஒழுக்கம், விளையாட்டின் அனுபவம் ஆகிய அனைத்தும் சேர்ந்து அவ னுடைய எதிர்காலத்தை உருவாக்கு கின்றன என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. விளையாட்டு நமக்கு வெற்றியை மட்டுமல்ல, வெற்றியை ஏற்றுக்கொள்ளும் பணிவையும், தோல்வியைத் தாங்கும் மன வலிமையையும், மீண்டும் முயற்சி செய்யும் தன்னம்பிக்கையையும் கற்றுத் தருகிறது.
“சிறந்த மனிதராக வேண்டும்” என்ற எண்ணத்தோடு விளையாடுங்கள். நான் இந்தப் பள்ளியில் பெற்ற கல்வியும், ஆசிரியர்களின் அறிவுரைகளும், பள்ளி அளித்த நல்ல பண்புகளும், நல்வாய்ப்புகளும் என் வாழ்க்கைப் பயணத்தில் மிகப்பெரிய பங்காற்றி யுள்ளன.
இன்று நான் மருத்துவராக உயர்ந்திருந் ததால், அதன் அடித்தளத்தில் இந்தப் பள்ளியும், என்னை உருவாக்கிய என் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
கனவை நம்புங்கள். உழையுங்கள். தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்கள் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதித்து, நல்ல மனிதர்களாக உயருங்கள் என்று கூறி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்தார்.
மாலை 4.30 மணி அளவில் கற்றல் விளையாட்டு விழா மொழி வாழ்த்துடன் மிகவும் கோலாகலமாக தொடங்கியது.
பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்க, பள்ளியின் முதல்வர் ஜான் பிரிட்டோ தலைமையேற்றார்.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பி.சுப்பிரமணியன் ஒலிம்பியன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மேலும் சி.காமராஜ் பொதுக்குழு உறுப்பினரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினருக்கு டி.கிருஷ்ண குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர், நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் அணிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் NGC, JRC, NCC. RSP, RRC, SCOUT AND GUIDS ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் 6 முதல் 9 வரை பயிலும் மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான உடற்பயிற்சிகளைச் செய்து காட்டினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் ராஜேஷ் சென்ற ஆண்டு மாணவர்கள் படைத்த சாதனைகளின் பட்டியலை ஆண்டு அறிக்கையாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் லெசியூம் நடனம் மற்றும் நாட்டுப்புற நடனம் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் செய்து காட்டிய யோகா, பிரமிடு, சிலம்பம் மற்றும் கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பெற்றோர்களுக்கான விளையாட்டு நடத்தப்பட்டு மூன்று இடம் பிடித்த பெற்றோர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அணிவகுப்பில் முதலிடத்தைப் பிடித்த – மஞ்சள் வண்ண – அணியினருக்கும் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தைப் பிடித்த- சிவப்பு வண்ணசிறப்பு விருந்தினர் கோப்பைகளை வழங்கி, பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர் தன்னுடைய சிறப்புரையில் விளையாட்டு என்பது உடல் வலிமையை மட்டும் அல்ல மன வலிமையையும் அதிகரிக்க செய்கிறது. நினைவுத்திறனை அதிகப்படுத்துகிறது.விளையாட்டில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு ஊக்கத்தொகைகள், கல்விச் சலுகைகள், பணி வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
எனவே, மாணவர்கள் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், பன்னாட்டு அளவில் சாதனைப் படைத்த பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமையை சேர்க்க வேண்டும். மேலும் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளைக் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் பங்கேற்பதற்கு நீங்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிறைவாக மாணவிகள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின்முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
