வடாற்காடு மாவட்ட குறள் மாநாடு மற்றும் சுதந்திரத் தமிழ் நாடு மாநாடு 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று வேலூரில் பாரக்ஸ் திடலில் நடைபெற்றது. மாநாட்டு பந்தலிற்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்று பெயர் சூட்டியிருந்தனர்.
குறள் மாநாட்டிற்கு தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை தாங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறள் மாநாட்டினை திறந்து வைத்தார்.
சி.பா.ஆதித்தனார் தலைமையில் நடைபெற்ற சுதந்திரத் தமிழ் நாடு மாநாட்டினை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டில் திருக்குறளார் முனுசாமி, கு.மு.அண்ணல் தங்கோ, ‘புலித்தேவன்’ சகாதேவன், பாவலர் பாலசுந்தரம், ஏ.பி.சனார்த்தனம், கா.ப. அழகநம்பி, இமயவரம்பன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் பங்கேற்று மாநாட்டினை சிறப்பித்தனர். முன்னதாக வில்லுப்பாட்டு கலைஞர் ந.ஆ.சு.மணி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

