உலகளவில் நிதிச் சுமையின்றி மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு 3.4 கோடி அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுவதாக, தி லான்செட் பப்ளிக் ஹெல்த் (The Lancet Public Health) இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்தியாவின் மக்கள்தொகையின் அடிப்படையில், 10,000 இந்தியர்களுக்கு வெறும் 73 மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 10,000 பேருக்கு வெறும் 10.5 மருத்துவர்கள் மற்றும் 10.8 செவிலியர்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் அதிக மருத்துவப் பணியாளர்களின் தேவையுள்ளதாகவும், கூடுதலாக 26 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 1 கோடி செவிலியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 1990 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், உலகளவில் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து மும்மடங்கு அதிகரித்து 12 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில், பெண்கள் சுமார் 71.4 சதவிகிதம் பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
