அகமதாபாத், ஆக்.20- குஜராத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன் கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சந்த்லோடியா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களாக கடுமையான உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமியின் பெற்றோர், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த நபர் சந்ரேஷ் பஞ்சால் (45) என்பவரை அணுகினர்.
அப்போது அந்த சிறுமியைப் ‘பேய்’ பிடித்துள்ளதாகவும், சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்தால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்றும் அந்த குடும்பத்தினரிடம் சந்ரேஷ் பஞ்சால் கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய சிறுமியின் குடும்பத்தினர், அவரை தங்களது வீட்டிற்கு அழைத்தனர். பூஜை செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியின் குடும்பத்தினரை அறையை விட்டு வெளி யேறுமாறு கூறிய சந்ரேஷ் பஞ்சால், தனிமையில் இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னரும் சிகிச்சை என்ற பெயரில் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வந்து சென்ற சந்ரேஷ் பஞ்சால், சிறுமியை பலமுறை தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, அண்மையில் தனக்கு நடந்த கொடூர அனுபவத்தை பெற்றோ ருக்கு தெரிவித்து கதறி அழுதார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சோலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மந்திரவாதி சந்ரேஷ் பஞ்சாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
