அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன். ஒரு விளையாட்டுப் போட்டியில் மூவர் தேர்வு செய்யப்படுவர். பரிசு கொடுக்கும் நேரத்தில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் குறிப்பிடப்பட்ட உயரத்தில் அவர்கள் நிற்க வைக்கப்படுவர்.
திடீரென முதல் மேடையில் நிற்கும் சிறுவன் இரண்டாம், மூன்றாம் இடத்தில் நிற்பவர்களை அழைத்து, தம் அருகே நிற்க வைத்துக் கொள்வான். பிறகு மூன்று சிறுவர்களும் ஒரே இடத்தில் நின்று, சிரித்தவாறே கையசைப் பார்கள். அதாவது “யாருக்கும் எந்த வேறுபட்ட உணர்வும் வரக்கூடாது, எல்லோரும் சமம், இணையான தோழர்கள் நாம்” எனச் சொல்லாமல் சொல்லும் அந்தக் காணொலிக் காட்சி.
அதை நினைவுபடுத்தும் விதமாக நம் பெரியார் பிஞ்சுகளும் நம்மை நெகிழ வைத்துவிட்டார்கள். திருச்சி மாவட்டக் குடும்பச் சந்திப்பு 9.8.2026 அன்று திருவெறும்பூரில் நடைபெற்றது. அதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று சிறுவர்களுக்கான இசை நாற்காலி!
எட்டு பேர் கலந்து கொண்ட அதில் ஆறு பேர் வெளியாகிவிடுவர். மீதம் இரண்டு பேர் இருந்தனர். மய்யமாய் ஒரே ஒரு நாற்காலி இருந்தது. விளையாட்டுத் தொடங்கியது; இசை ஒலிபரப்பு செய்யப்பட்டது. பார்வை யாளர்களின் ஆராவாரத்திற்கு இடையே இரண்டு சிறுவர்களும் சுற்றி வரத் தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல மகிழ்ச்சி கலந்த பரபரப்பு அங்கே தொற்றிக் கொண்டது.
ஆனால் இறுதியில் நடந்ததோ யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஆமாம்… இருவருமே சுற்றி வருகின்றனர், சிறிது நேரத்தில் இசை நிறுத்தப்படுகிறது. அந்த நொடிப் பொழுதில் இருவருமே இருக்கையில் அமராமல் அப்படியே நின்றுவிட்டனர். பார்வையாளர்களோ திகைத்துப் பார்க்கின்றனர்.
இறுதியில் பார்த்தால், இரண்டு சிறுவர்களுமே ‘‘நீ உட்கார்!’’ என ஒருவரும், ‘‘நீ உட்கார்!’’ என மற்றொருவருமாகச் சிரித்துக் கொண்டே பேசிய அந்த அன்பு மொழி கேட்டு அனைவருமே அசந்துவிட்டோம். பிறகு அந்த இரண்டு சிறுவர்களுக்குமே அரங்கம் அதிர ஆர்ப்பரித்துக் கரவொலியை வழங்கினோம்.
இப்பெருமைமிகு பெரியார் பிஞ்சுகளின் பெயர்கள் இரணியன், தமிழரசன்.
– வி.சி.வில்வம், திருவெறும்பூர்
