திருச்சி, மார்ச் 12– கற்பூரம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் இறந்தார். திருச்சி இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண் டனர். தேர் நிலையை அடைந்த பிறகு பக்தர்கள் தேருக்கு முன்பாக கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் தேர் நிலைக்கு வந்த பிறகு கோவில் முன்பு இனாம்சமயபுரம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த சரோஜா(வயது 64) என்பவர் கற்பூரம் ஏற்றி வழிபட்டபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றியது. இதில் அவருக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.