கேரளா, ஜூலை 31- சபரிமலை அய்யப்பன் கோயில் சன்னிதானத்திற்கு ‘மில்மா’ நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகப் பால்வள மேம்பாட்டுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சபரிமலை பக்தர்களின் நெய் அபிஷேக நிகழ்வுகளுக்காகக் கொண்டு செல்லப்பட்ட நெய்யில், சுமார் 1.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமான தரம் குறைந்த நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பத்தனம் திட்டாவில் இருந்து பம்பைக்கு நெய்யைக் கொண்டு செல்லும் வழியில், மில்மா நிறுவனத்தின் அசல் நெய்க்குப் பதிலாகத் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த கலப்பட நெய் கலக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் காரணமாக மில்மா நிறுவனத்திற்கு ரூ.85 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் விதிகளை முற்றிலும் மீறி, குறிப்பிட்ட நபருக்குச் சாதகமாக ஒப்பந்தம் வழங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் பால்வள மேம்பாட்டுத் துறையின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
