புதுடில்லி, ஆக.5 தமிழ்நாட்டில் நிரம்பாத, 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை, அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவில், மறு ஆய்வு கோரி, இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில், 740க்கும் மேற்பட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
அதன்படி ஒதுக்கப்பட்ட இடங்களில், 151 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் நிரம்பவில்லை. அவ்வாறு நிரம்பாத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டில், ‘கட் – ஆப்’ மதிப்பெண் குறைத்து, அவ்விடங்கள் நிரப்பப்படும். இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நிரம்பாமல் உள்ள, 151 இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும். அங்கு, இரண்டு கட்ட கலந்தாய்வில், ஒரே மாதிரியான, ‘கட்- ஆப்’ மதிப்பெண் அடிப்படையில், காலியிடங்களை நிரப்ப வேண்டும். ‘கட்- ஆப்’ மதிப்பெண் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், காலியாக இருக்கும் இடங்களில், 50 சதவீதத்தை மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும்’ என, அண் மையில் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றினால், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக சேவை செய்து வரும், அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக் கான சேவை ஒதுக்கீட்டு வாய்ப் புகள், முற்றிலும் பாதிக்கப்படும். ஏற்ெகனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்து, காலியாக உள்ள இடங்களை, மாநில அளவிலேயே, தகுதியான தமிழ்நாடு அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு முன், சங்கத்தின் சார்பில், இம் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு, மனுவை விரைவில் விசாரணைக்கு பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது.
