வேலூர், ஜூலை 27- வேலூர் விமான நிலையத்துக்கான பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை விரைவில் மக்கள் பயன் பாட்டுக்குத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பாஜகவினருடன் இணைந்து கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும், பணிகளை உடனடியாக விரைவுபடுத்தி விமான நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.
