சென்னை, ஜூலை 25– வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை பதிவு செய்வதில் தாமதம் ஏன்? என்பதற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரி விளக்கம் அளித்தார்.
தகுதித்தேர்வு
வெளிநாடுகளில் மருத்துவப்படிப்பு முடித்த இந்திய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற தகுதி பெறுவதற்கு வெளிநாட்டு மருத்துவ படிப்பு தேர்வு (எப்.எம்.ஜி.இ.) நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுதி தகுதி பெறுபவர்களே மருத்துவராகப் பணியைத் தொடர முடியும். அப்படி ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நடத்தப்படும் இந்தத் தகுதித் தேர்வை பலரும் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்.
அவ்வாறு தேர்ச்சிபெறுபவர்கள் மருத்துவ கவுன்சிலில் அதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் நாடு மருத்துவ கவுன்சிலில் அதற்கான பதிவை மேற்கொள்ள வருகிறார்கள். அப்படி வருபவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், பதிவு செய்வது தாமதப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அடுத்த வாரம் வாருங்கள்…
இதுகுறித்து சிலர் கூறும் போது, “பொறுப்பான அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கும் பணியாளர் மூலம் மட்டுமே தகவல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அடுத்த வாரம் வாருங்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது, எப்போது முடியும் என்று தெரியாது என்ற ஒரே பதிலே பல மாதங்களாக தொடர்ந்து சொல்கிறார்கள்” என தெரிவித்தனர். இதனால் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்கள் கூறினர்.
அதிகாரி விளக்கம்
இந்தநிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் விவரங்களை பதிவு செய்யும் செயல்பாடுகளுக்கான நடைமுறைகள் அதிகம் இருக்கிறது. தூதரகம், பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சான் றிதழ்கள் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டு அது உறுதிசெய்யப்பட வேண்டும்.
குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும். இதுபோன்ற சான்றிதழ்கள் கடந்த காலங்களில் ஒத்துபோகாமல் போன விவகாரங்கள் அதிகம் நடந்திருக்கிறது. ஆகவே அதையெல்லாம் சரியாக செய்த பின்னரே பதிவு செய்யப்படும். இதில் வேண்டுமென்றே தாமதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
