நியூயார்க், ஜூலை 16 நியூயார்க்கில் உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு ரூ.482 கோடிக்கு ஏலம்போனது. இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடுகளிலேயே இதுதான் அதிக விலைக்கு சென்றுள்ளது. இது உலகின் மிக முழுமையான T. rex டைனோசர் எலும்புக்கூடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த எலும்புக்கூடு சவுத் டகோட்டாவில், கேரி என்பவரின் நிலத்தில் 2021-இல் கண்டறியப் பட்டது. அதனால், ஏலத்தொகை அவரது குடும்பத்தினருக்கே செல்லும்.
மாரடைப்பால் சாக வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது : மம்தா
கொல்கத்தா, ஜூலை 16 தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு சாக வேண்டும் என பாஜக விரும்பு வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். அவரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மதன் மித்ரா அதிருப்தி குழுவில் இணைந்தார். இந்நிலையில் பேசிய மம்தா, எதிர்க்கட்சிகளை ஒடுக்க பாஜக ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது. எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் பாஜக அழிவை பார்க்கும் வரை நான் உயிருடன் இருப்பேன் என கூறினார்.
அமோனியா கசிவு
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாக்கீது!
புதுடில்லி, ஜூலை 16- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வு குறித்து, ஒரு நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் சிறீவாஸ்தவா தலைமையிலான அமர்வு தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கை விசாரித்தது.
இது தொடர்பாக, பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த ஆலையில் தொழிற்சாலை பாதுகாப்பு விதிகள், அபாய ஒலி எழுப்பும் ஏற்பாடு, தீத்தடுப்பு கருவிகள் உள்ளிட்டவை இல்லாமல் பல்வேறு விதி மீறல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர், செயலர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தின் பிராந்திய அதிகாரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்கு முன்னதாக ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை சென்னையில் உள்ள தென்மண்டல அமர்வில் ஆக.31-ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
