1832ஆம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில், வங்காளத்துப் பார்ப்பனர்களின் மேல் முறையீட்டு மனுவின் மீது தனது தீர்ப்பை வழங்கியது. வில்லியம் பென்டிங் கொண்டு வந்த சட்டம் சரியானதே என்று, மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.
“ஏற்கெனவே நிலை நிறுத்தப் பட்டுள்ள நியாயமான மதச் சகிப்புத் தன்மைக் கோட்பாடுகளிலிருந்து இந்தச் சட்டம் விலகிச் செல்லவில்லை. இந்தச் சடங்கு ஒரு மதச் செயல்பாடு என்பதால் தடை செய்யப்படவில்லை. அது சமுதாயத்திற்கு எதிரான ஓர் அப்பட்டமான குற்றம் என்பதால் தடை செய்யப்பட்டது” என்று பிரிவியூ கவுன்சில் விளக்கமளித்தது.
இந்தச் சடங்கு இந்துக்களின் மத நிறுவனங்களில் “புனித”மானதாக கூறப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கவுன்சில் “அதிகம் கற்றறிந்த இந்துக்களில் பலரும் அதை முழுமையான பாவமாகக் கருதுகின்றனர்” என்று கூறியது. மேலும் “சதி”க் கொடுமையைப் பற்றி பிரிவியூ கவுன்சில் என்ன கூறியது?
“சதி” மனித சுபாவத்திற்கு அருவெறுப்பைத் தரக்கூடியது. தேசிய உணர்வையும், குணத்தையும் மோசமாகச் சிதைக்கும் தன்மையுடைய, இதயத்தின் சிறந்த உணர்வுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும், வக்கிரமான மத உணர்வுகளைத் தோற்றுவிக்கும் ஒரு நடைமுறையை தடை செய்வது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்” என்று வில்லியம் பென்டிங்கின் உத்தரவை ஆதரித்தும், அந்த உத்தரவுக்கு வலு சேர்க்கும் வகையில் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு வழங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு காட்டுமிராண்டித்தன வன்முறைக்கு பெருமளவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட காரணமானது. (Ref: “சாதிப் பெருமை” by மனோஜ் மிட்டா.)
1829ஆம் ஆண்டு சமரசமின்றி போராட்ட உணர்வுடன் வில்லியம் பென்டிங் பிரபுவால் எழுதப்பட்ட சட்டம் ஆங்கிலேய ஆட்சியின் 150 ஆண்டு கால வரலாற்றில் பார்ப்பனர்களின் பழங்கால, பழமைவாத உணர்வுகளுக்கு எந்தவித சலுகையும் அளிக்காமல் செய்யப்பட்ட முதல்முதலான பாலியல் நீதிச் சட்டம் என்றே சொல்லலாம். பிரிவியூ கவுன்சிலில் பார்ப்பனர்கள் தோல்வியடைந்தாலும் தன் முயற்சிகளைக் கைவிட வில்லை. அவர்கள் “சதி”க்கு ஒரு புதுமுறை மாறுபட்ட விளக்கவுரை கூறினார்கள். (Ref: “சாதிப் பெருமை”by மனோஜ் மிட்டா.)
“சதி”க்கு ஆங்கிலேய அரசின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபு தடை ஆணை பிறப்பித்த பின் அதை உடைக்க பல முயற்சிகள் செய்தும் தோல்வியே அடைந்தனர். சில இடங்களில், முக்கியமாக கிராமங்களில் திருட்டுத்தனமாக பெண்களை இறந்த கணவனோடு வைத்து எரிக்கவும் செய்தனர். 1833இல் வில்லியம் பென்டிங் பிரபுவுக்கு கிழக்கிந்திய கம்பெனி தலைமை ஆளுநர் பதவியைக் கொடுத்தது.
சட்டங்களின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் சட்ட உறுப்பினையும், கவர்னரின் கவுன்சிலில் ஏற்படுத்தியது. இந்த முக்கியமான பதவியில் முதன்முதலில் அமர்ந்தவர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே. (பார்ப்பனர்கள் மட்டுமே ஏகபோக உரிமையாக அனுபவித்து வந்த கல்வியை அழுத்தப்பட்டுக்கிடந்த மக்களுக்கு கிடைக்கச் செய்து, புரட்சி செய்த அதே மெக்காலேதான்!) சட்ட உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின் அவர் முக்கிய பணியாகச் செய்தது “தண்டனைக்குரிய குற்றங்களை வரையறை” செய்து எழுதிய சட்டத் தொகுப்புதான்!

உலக அளவில் முதன்மையாகக் கருதப்படும் அந்தூல் மெக்காலே குழுவினரால் 1835 முதல் 1837 ஆண்டுவரை, பல சமூக நடைமுறைகளையும், பண்பாடு களையும் ஆய்வு செய்து எழுதப்பட்டது. வில்லியம் பென்டிங்கின் பணிக்காலம் முடியும் தருவாயில் மெக்காலே தன் பணியைத் துவக் கினார். அவரிடம் “சதி” தடையை நீக்கக்கோரி மீண்டும் கோரிக்கை வைத்தனர். அதில்தான் “சதியைப் பற்றிய புதிய விளக்கம் கொடுத்தனர். (Ref: “சாதிப் பெருமை”by மனோஜ் மிட்டா.)
“சதி” என்ற பெண் கொலைக்குப் புது விளக்கம் ஒன்றை பார்ப்பனர்கள் தாமஸ் பாபிங்டன் மெக்காலேவிடம் கொடுத்தனர். “சட்ட பூர்வமான சதி”, சட்ட விரோதமான சதி” என்பதே அது. இந்து மத ஆசாரப்படி, சொர்க்கத்திற்குப் போக முடிவு செய்து ஒரு பெண் தானாக முன்வந்து செய்வது அவள் சொந்த விருப்பம். அதை “சட்ட பூர்வ சதி” என்று அங்கீகரிக்க வேண்டும். ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தி நெருப்பில் தள்ளிக் கொல்வதை “சட்ட விரோத சதி” என்று வகைப்படுத்தி அந்தக் குற்றத்தில் ஈடுபடுபவரை மட்டும் தண்டிக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. ஆனால் கணவன் இறந்தவுடன் வீட்டிற்குள்ளேயே இருக்கும் பெண்ணை சுற்றமும், உறவுகளும் கட்டாயப்படுத்தி அந்தச் செயல் புனிதமானது, கடவுள் அருள் கிடைக்கும், தீயில் குதிக்கும் பெண்ணே “சதி மாதா” என்று கடவுளே ஆகிவிடுவாள் என்றெல்லாம் கூறி, அந்தப் பெண்ணை மூளைச் சலவை செய்து விட்டு, அவரே நெருப்பில் குதிக்கும்படி செய்து, அதை “சட்டபூர்வமான சதி” என்று பார்ப்பனர்கள் சாதித்தனர். வில்லியம் பென்டிங் பிரபு உத்தரவு “சட்டபூர்வமான சதி, சட்ட விரோதமான சதி” என்று எதுவாக இருந்தாலும் அது கொலைக் குற்றமே என்று கூறியது. பார்ப்பனர்கள் “சட்டபூர்வ சதி”யை கொலைக் குற்றப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்று மெக்காலேவிடம் கோரிக்கை வைத்தனர். (Ref: “சாதிப் பெருமை”by மனோஜ் மிட்டா.)

சட்ட உறுப்பினரான தாமஸ் பாபிங்டன் மெக்காலே “சதி”ப் பழக்கத்தின் சதியை தீர ஆய்வு செய்தார்.உச்ச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கெனவே மிகவும் மோசமான “சதி” நடவடிக்கைகளுக்கு மரணத்திற்குக் குறைவில்லாத தண்டனையை வழங்கும் அதிகாரத்தை “நியாயசத் அடல்லாத்” என்ற உச்ச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழங்கியிருந்தது.
“ஒரு கைம்பெண்ணுக்குப் போதையூட்டி அல்லது அவரை மயக்கமடையச் செய்து அல்லது அவர் சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுப்பதைத் தடுக்கும் வேறு வழிகளைக் கையாண்டு அவரை எரிப்பதற்கு உதவி செய்பவர்களுக்கு, அல்லது “வன்முறையாகவும், கட்டாயப்படுத்தியும்” அவரை எரிக்கும் குற்றம் செய்பவர்களுக்கு இந்த அதிகபட்ச தண்டனை பரிந்துரைக்கப்பட்டது” என்ற தீர்ப்பையும் மெக்காலே ஆய்வு செய்தார். அதன்பின் அவர் முடிவு எடுத்தார்.
