உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும்
எரிபொருள் விலையைக் குறைக்காமல்
மோடி அரசு மக்களை வஞ்சித்து வருகிறது!
புதுடில்லி, ஜூன் 29- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பிய பின்னரும், உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்காமல் ஒன்றிய அரசு மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி யுள்ளார்.
இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கச்சா எண்ணெய் விலை சரிவு
பாஜக அரசின் செயல்பாடுகளை “கொள்ளை மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் பழக்கம்” என்று கடுமையாகச் சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, மோடி அரசு மக்களின் சேமிப்பின் மீதான பிடியை இறுக்கிக்கொண்டே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக மல்லிகார்ஜூன கார்கே மூன்று முக்கியக் கேள்விகளை முன்வைத்துள்ளார்:
கேள்வி 1 (விலை முரண்பாடு)
மேற்கு ஆசியாவில் போர் உச்சத்தில் இருந்தபோது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 138 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 94.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 87.67 ஆகவும் இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70.71 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ள நிலையிலும், மோடி அரசு ஏன் இன்னும் டில்லியில் பெட்ரோலை லிட்டருக்கு ரூ. 102.12-க்கும், டீசலை லிட்டருக்கு ரூ. 95.20-க்கும் விற்பனை செய்கிறது?
கேள்வி 2 (எல்பிஜி விலை உயர்வு)
போர்ச் சூழலை மட்டுமே காரணம் காட்டி, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலையை பாஜக அரசு இருமடங்காக உயர்த்தியது. தற்போது விநியோகம் சீராகிவிட்ட போதிலும், அந்த விலையை ஏன் இன்னும் குறைக்கவில்லை?
கேள்வி 3 (மக்களின் சுமை)
தற்போது பன்னாட்டு அளவில் நிலைமை இயல்புக்குத் திரும்பிய பிறகும், எரிபொருள் விலையைக் குறைப்பதில் மட்டும் மோடி அரசின் கைகள் ஏன் நடுங்குகின்றன?
“கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது மக்கள் பாதிக்கப் பட்டார்கள். தற்போது அதன் விலை குறைவாக இருக்கும்போதும் மக்கள் ஏன் தொடர்ந்து இந்த சுமையைத் சுமக்க வேண்டும்? இதன் மூலம், பாஜக அரசு மக்களை வெறும் வரிகளை வசூலிப்பதற்கும், தங்கள் வருவாயைப் பெருக்குவதற்குமான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று மல்லிகார்ஜூன கார்கே தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
உலக சந்தையின் சாதகமான சூழலை மக்களுக்குப் பயன்படுத்தாமல், ஒன்றிய அரசு தொடர்ந்து எரி பொருள் விலையை உயர்வாகவே வைத்தி ருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
