மும்பை, ஜூலை 19- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பல அதிர வைக்கும் உண்மை களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஅய், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உட்பட 13 முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
வாட்ஸ்அப் முன்கூட்டியே கசிந்த கேள்வி
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மகாராட்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த பயிற்சி மய்ய உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்கர் என்பவரின் கைப்பேசியை சிபிஅய் அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனையிட்டனர்.
சிவராஜ் மோடேகாவ்கரின் கைப்பேசியில் இருந்து 36 ஒளிப்படங்கள் மீட்கப் பட்டன.
அதில் அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட 132 தனித்துவமான கேள்விகள் (மொத்தம் 136 கேள்விகள், அதில் 5 நகல் படங்கள்) இருந்தன.
இந்த வினாக்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் இருந்த 111 வேதியியல் கேள்விகள், தேசிய தேர்வு முகமை தயாரித்த முதன்மை வினாத்தாளுடன் அச்சுப் பிசகாமல் அப்படியே பொருந்திப்போயுள்ளது உறுதியானது.
மேலும், அந்த ஒளிப் படங்களின் மெட்டா டேட்டாவை (Metadata) ஆய்வு செய்ததில், அவை மே 3ஆம் தேதி தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே, அதாவது ஏப்ரல் 23ஆம் தேதியே எடுக்கப்பட்டவை என்பது அம்பலமாகியுள்ளது.
ரூ. 5 லட்சம் லஞ்சம்: சிக்கிய மொழிபெயர்ப்பாளர்
நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் மொழிபெயர்ப் பாளராகப் பணியாற்றிய பி.வி.குல்கர்னி என்பவரே இந்த வினாத்தாள் கசிவுக்குக் காரணமான முக்கிய சூத்திரதாரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வினாத்தாளைப் பெறுவதற்காக, பயிற்சி மய்ய உரிமையாளர் சிவராஜ் மோடேகாவ்கர், லாத்தூரைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் மனோஜ் ஷிரூரே என்பவரின் தரகர் தர்மத்தின் மூலம் குல்கர்னிக்கு ரூ. 5 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளார். இந்த லஞ்சப் பணத்தை சிபிஅய் தற்போது பறிமுதல் செய்துள்ளது.
சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சி
இவ்வாறு சட்டவிரோதமாகப் பெறப்பட்ட வினாத்தாள்களைக் கொண்டு, மோடேகாவ்கரின் மகன் மற்றும் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு, வினாத்தாள் கசிவுக்குக் காரணமான குல்கர்னியே தனது சிறப்பு வகுப்புகள் மூலம் முன்கூட்டியே பயிற்சி அளித்துள்ளார் என்பதும் சிபிஅய் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் கல்வி வட்டாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
