சென்னை, ஜூன் 6– தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2026-2027-ஆம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம், பாடங்களில் பெறும் சராசரி மதிப்பெண் ஆகியவற்றை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக கடந்த கல்வியாண்டின் (2025-2026) தேர்வு முடிவுகள் குறித்து பள்ளி வாரியான மற்றும் பாட வாரியான தகவல்களும், முந்தைய ஆண்டு முடிவுகளுடனான ஒப்பீடும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறைந்த தேர்ச்சி சதவிதம் மற்றும் குறைந்த சராசரி மதிப்பெண்களைக் கொண்ட பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தையும் சராசரியையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை அதிக தேர்ச்சி சதவீதத்தைக் கொண்ட பள்ளிகள் சராசரி மதிப்பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டங்களை அவ்வப்போது நடத்தலாம். வாய்ப்பிருந்தால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கலாம்.
ஆய்வுக் கூட்டத்துக்கு முன்னரோ அல்லது கூட்டத்தின்போதோ, மாநில மாவட்ட மற்றும் அந்தந்தப் பள்ளி அறிக்கைகளின் வண்ண அச்சுப் பிரதிகளை ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்னென்ன செயல் திட்டங்களை வைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும்.
எளிதாக அச்சிடுவதற்காக அறிக்கைகள் பிடிஎஃப் வடிவத்தில் வழங்கப்படும். விரைவில் ”எச்செல்’ வடிவமும் வழங்கப்படும். முன்னதாக தேவைப்பட்டால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் கேட்டுப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
