சென்னை, ஜூன் 6– சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தின் 5ஆவது வழித்தடத்தில், கடைசி ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தயாரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது ஆலோசகரான ஏஇஓஎன் (AEON) மற்றும் எல் அண்ட் டி (L&T) நிறுவனத்துடன் இணைந்து, ஆதம்பாக்கம் மெட்ரோ நிலையப் பணிகளுக்காக 19.5 மீட்டர் நீளமுள்ள இந்த கடைசி பாலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை மெட்ரோ வரலாற்றிலேயே மிகப் பெரிய இலக்கான 824 ‘யு’ வடிவ கான்கிரீட் பாலங்கள் தயாரிக்கும் பணி முழுமையாக எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட உற்பத்தி தளம்: 43 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், 6 பிரத்யேக பிரிவுகளுடன் செயல்பட்ட இந்த தளம், 13.1 கி.மீ நீள உயர்மட்ட வழித்தடத்திற்கான கட்டுமானப் பொருட்களை தயாரித்தது.
உற்பத்தி விவரங்கள்: 824 ‘யு’ வடிவ பாலங்கள் மட்டுமின்றி, 2,055 ‘அய்’ வடிவ பாலங்கள், 1,465 தூணின் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் 1,079 பாதுகாப்பு கைப்பிடி சுவர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இவை உற்பத்தி தளத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவின் நீளமான பாலம்: இத்திட்டத்தில் மிகச்சிறிய 8.9 மீட்டர் நீளம் முதல், இந்தியாவின் மிக நீளமான 33.33 மீட்டர் நீளமுள்ள (225 மெட்ரிக் டன் எடை) ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் வரை தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக, ஹைட்ராலிக் அமைப்புகளுடன் கூடிய தானியங்கி ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தொழில்நுட்பம் கணினி கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியிட பாதுகாப்பு மற்றும் தரம் அதிகரித்ததோடு, வேலை நேரமும் கணிசமாகக் குறைந்துள்ளது.
எவ்வித தொழில்நுட்பக் குறைபாடுகளும் இன்றி இந்த மாபெரும் இலக்கு எட்டப்பட்டிருப்பது, இந்திய மெட்ரோ ரயில் கட்டுமான வரலாற்றில் ஒரு புதிய சாதனை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
