புதுடில்லி, ஜூன் 06 ஒன்றிய அரசின் கிரேட் நிகோபர் தீவு திட்டத்திற்கு பதிலாக, நாட்டின் பசுமையைப் பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மரங்கள் அழிப்பு
இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் காணொலிக் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “பேராசைக்கு பதிலாக பசுமையையே நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்” என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றில் பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்திய இளைஞர்களிடம் கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, “சூதாட்ட விடுதிகளுக்காக (casinos) மழைக்காடுகள் அழிக்கப்பட்டு, பவளப்பாறைகள் வரைபடத்தில் இருந்தே நீக்கப்பட்டு, பழங்குடியின சமூகங்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு இந்தியாவையா நீங்கள் மரபுரிமையாகப் பெற விரும்புகிறீர்கள்? அல்லது இயற்கை பாரம்பரியமும், பழங்குடியின சமூகங்களும் பாதுகாக்கப்பட்டு, இயற்கையோடு இணைந்து வளர்ச்சி அடையும் இந்தியாவையா?” என்று வினவியுள்ளார்.
மேலும், ஒரேயொரு தொழிலதிபருக்கு லாபம் ஈட்டித் தருவதற்காக 1.5 கோடிக்கும் அதிகமான மரங்கள், பழைமையான பவளப்பாறைகள் மற்றும் ஈடு இணையற்ற மழைக்காடுகள் இந்த திட்டத்தின் மூலம் அழிக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி ஒன்றிய அரசு மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
