“நான் கிருஷ்ணனின் மறுபிறப்பு” என்று கூறி பல இளம்பெண்களுக்கு அதீத போதைதரும் உயர்ரக போதைப்பொருளைத் தந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி அபிஷேக் மிஸ்ரா கைது!
“நான் கிருஷ்ணனின் மறுபிறப்பு”
“நான் கிருஷ்ணனின் மறுபிறப்பு” என்று கூறி பல இளம்பெண்களுக்கு அதீத போதைதரும் உயர்ரக போதைப்பொருளைத் தந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி அபிஷேக் மிஸ்ரா கைது!
“கீதையில் கிருஷ்ணன் தான் இதைச் செய்யக் கூறினார்” என்று இவர் சொல்வதுதான் அய்லைட்.
பகவத் கீதை உபதேசம் செய்வதாகக் கூறி படித்த இளம் பெண்களை மூளைச் சலவை செய்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த அய்அய்டி பட்டதாரி ஹரேராதா ஹரேகிருஷ்ணா சாமியாரை மதுரா மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரா புறநகர் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் சந்த் ராவத் தெரிவித்த தகவல்கள்தான் இவை:
“மதுரா மாவட்டத்தின் கோவர்தன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா குண்ட் பகுதியில் வசிக்கும் அபிசேக் மிஸ்ரா என்ற பார்ப்பனர் கரோனா காலத்தில் இணையவழி கீதாபோதனை என்ற பெயரில் யூ டியுபில் மோசடி செய்ய ஆரம்பித்தார்.
இவரின் ஸநாதன போதனை – இவரது இணைய வழி ‘கீதை’ உபதேசம் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, நன்கு படித்த பல இளம் பெண்கள் இந்த மோசடி ஸநாதனியின் தீவிரபக்தை ஆனார்கள். இவர் தன்னை அவர்களிடம் தான் ‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று கூறி, அப் பெண்களை மூளைச்சலவை செய்தார்.
பின்னர் மிகவும் சக்திவாய்ந்த விலை உயர்ந்த போதைப் பொருள்களைப் பிரசாதம் என்ற பெயரில் அவர்களுக்குத் தருவார். பின்னர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து இது “கிருஷ்ணபரமாத்வாவின் லீலைகளில் ஒரு அங்கம்” என்று கூறுவார். தாங்கள் மோசடியாக இவரால் பாதிக்கப்பட்டோம் என்று உணராத மனநிலைக்கு அவர்களை ஆக்கிவைத்துவிட்டார். இந்த நிலையில் ஒரு இளம்பெண் துணிச்சலோடு வந்து புகார் அளித்ததன் பெயரில் இவரைக் கைது செய்துள்ளோம்” என்று எஸ்பி சுரேஷ் சந்த் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
இளம் பெண் அளித்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட காவல்துறை, உடனடியாக வழக்குப் பதிவு செய்தது. அங்கு பாதிக்கப்பட்ட பெண்களில் மேலும் ஒருவர் தைரியமாக முன்வந்து அளித்த வாக்குமூலம் மற்றும் காணொலிச் சான்றுகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் வன்கொடுமை உயர்ரக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவர்தன் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அய்அய்டி – ரூர்க்கி. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – (2017 முதல் 2021) பட்டதாரியான இவர் தனது பங்களாவில் பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரியோடு வசித்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவல் துறையினரின் நடவடிக்கையின் போது அந்த வளாகத்தில் இருந்து 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்களின் குடும்பத்தினரால் மறுவாழ்வு மற்றும் போதை மீட்பு மய்யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கோவர்தன் காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விரிவான மற்றும் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய எவராக இருந்தாலும், அவர்கள் மீது மதுரா காவல் துறையினர் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் சந்த் ராவத் உறுதியளித்துள்ளார்.
