இதுபற்றி ஓராண்டுக்கு முன்பே ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறோம். இருப்பினும் சிற்சில ஸ்தல ஸ்தாபனங்களிலும் சர்க்கார் நிலையங்களிலும் விடுதலையை வரவழைப்பதுபற்றி சந்தேசப்படுவதாகவும் கடிதங்கள் வந்திருக்கின்றன. சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்ட பத்திரிகைகளை மட்டுமே ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியன வாங்கலாம் என்று கூறி அப்பேர்ப்பட்ட பத்திரிகைகளின் பட்டியல் ஒன்று 19.1.1949இல் (ஜிஓ நம்பர் எம்.எஸ். 122 Edn) வெளியிடப்பட்டது உண்மையே
ஆனால். அதன் பிறகு. 10.1.1952இல் இந்த உத்தரவு நீக்கப்பட்டது. இந்த மாதிரிப் பட்டியல் அவசியமில்லை (Government have decided that such a list is unnecessary’) என்று ஜிஓ நம்பர் எம்.எஸ். 62 Edn 10.1.1952இல் ஓர் உத்தரவு பிறந்திருக்கிறது. இதைப் படிக்காத சில அதிகாரிகளும் ஸ்தல ஸ்தாப உறுப்பினர்களும், விடுதலை வரவழைப்பதை எதிர்க்கிறார்கள்.
ஆகவே சென்ற மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கல்வி இலாகா காரியதரிசிக்கு இதுபற்றி எழுதப்பட்டிருக்கிறது. விடுதலை தடை செய்யப்பட்டிருக்கிறதா? அப்படியானால் அந்த உத்தரவின் நகல் ஒன்று தேவை. என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எழுதியுள்ளார் சென்ற வாரத்தில் இதற்கு ஒரு நினைவூட்டுக் கடிதமும் (reminder) அனுப்பியிருக்கிறார்.
மேலும் சர்க்கார் ஆஸ்பத்திரிகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றிற்கும் விடுதலை நுழைவதற்குத் தடையிருப்பதாகத் தெரிகிறது இந்தத் தடையையும் உடனே நீக்குமாறு கல்வியமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். விடுதலை அணுகுண்டு அல்ல அச்சம் வேண்டாம்! ஆகஸ்ட் சுதந்திரம் கொண்டாடிய சூடு தணிவதற்கு முன்பாக கருத்துக்கு சுதந்திரம் அளிக்கட்டும், கல்வியமைச்சர் அவர்களே!
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை என்று பாடுகிறவர்கள் ‘விடுதலை’க்கு விடுதலையளிக்கட்டும்!
‘விடுதலை’ 20.8.1954 பக்கம் 2
