கும்பகோணம், மே 31-– கும்ப கோணத்தில் வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைத்த த.வெ.க. நிர்வாகிகளை தட்டிக்கேட்ட காவல் துறையினரின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவுக்கு அமைச்சர் வினோத்தை வரவேற்று 28.5.2026 அன்று இரவு த.வெ.க.வினர் நால்ரோடு பகுதியில் தஞ்சாவூர்-மயிலாடுதுறை சாலையை இணைக்கும்இடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பேனர்களை குறுக்கே வைத்தனர்.
அப்போது அந்த வழியாக இரவு ரோந்து சென்ற காவல் துறையைச் சேர்ந்த காவலர் தேவநாதன் (35), அவர்களை கண்டித்து சாலையின் குறுக்கே வைத்திருந்த பேனரை அகற் றும்படி கூறினார். அவர்கள் அகற்றாததால் காவலரே பேனரை அகற்ற முயன்றபோது தவெக நிர்வாகிகளான பைராகிதோப்பை சேர்ந்த அருண் (21) மற்றும் காளி (30) ஆகியோர் தேவநாதனை சரமாரியாக தாக்கி அவரது வலது கையை பிடித்து முறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காவலர் தேவநாதனின் வலது கையின் மணிக்கட்டுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர், அங்கு வலியால் துடித்த தேவநாதனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவநாதன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அருண், காளி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், காவலரின் கையை உடைத்தது த.வெ.க. நிர்வாகிகள் இல்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காவலரின் கையை உடைத்த இருவரும் த.வெ.க. கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரில் அவர்களின் படம் இடம்பெற்று உள்ளது. இந்த காணொலி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
