சென்னை, மே 29- பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்தியாவை பாசிசத்தை நோக்கித் தள்ளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழி நடத்தப்படும் ஒன்றிய பாஜக அரசு, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமானவரித்துறை, நீதி மன்றங்கள் போன்றவற்றை தனது அரசியல் நோக்கங்களுடன் கூடிய தனது கட்டளைகளுக்கு அடிபணியும் அமைப்புகளாக மாற்றியுள்ளது. அந்த அமைப்புகளை எதிர்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், மிரட்டி – உருட்டி பணியவைக்கும் நோக்குடன் ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துகிறது.
அதே சமயம் எந்த பாஜக தலைவர்கள் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்படுவதில்லை. ரெய்டுகளுக்கு உள்ளான எதிர்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் அவர்கள் மீது எந்த தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஒன்றிய அரசின் இத்தகையப் போக்கு நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் விழுமியங்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.
ஒன்றிய அரசின் இத்தகைய போக்கையும், கேரள மாநலத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் இல்லங்கள் மீதான அமலாக்கத் துறையின் ரெய்டுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
