சென்னை, மே 25- மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 15,349 ரவுடிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டுமென்ற முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த காவல்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது.
காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் விவரம் பின்வருமாறு:
விசாரணை
வளையத்தில் ரவுடிகள்
கடந்த மூன்று நாட்களில் 12,650 வரலாற்றுப் பதிவேடு (History Sheeters) ரவுடிகள் மற்றும் 2,699 வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள் என மொத்தம் 15,349 பேர் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர்.
பிடிபட்டவர்கள்
தீவிர விசாரணையின் அடிப்படையில் 2,468 வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள், 778 வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள் என மொத்தம் 3,246 பேர் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற காவல்
இவர்களில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 844 ரவுடிகள் (488 வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள், 356 வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள்) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் ஒழிப்பு மட்டுமின்றி, சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கவும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
294 வழக்குகள் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்: 419 பேர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா: ரூ.1,43,78,200 மதிப்புள்ள 267.756 கிலோ கிராம் கஞ்சா.
போதை மாத்திரைகள்: 2,476 போதை மருந்து மாத்திரைகள்.
சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகவும், போதைப்பொருள் பயன்பாட்டை சமூகத்திலிருந்து முற்றிலும் துடைத்தெறியவும் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
