சென்னை, மே 25 மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா நேற்று (24.5.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் மமகவுக்கும் பிரிவையும் பிளவை யும் உண்டாக்கும் நோக்கில், உண்மையற்றச் செய்திகளை ஊதி பெரிதாக்கி உலாவ விடப்பட்டதை உணர முடிகிறது.
திமுகவுக்கும் மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும்.
மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட நிலையிலும் திமுக கூட்டணியில் கொள்கையுணர்வோடு நிலை பெற்றது மமக. 2019, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மமகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் நாட்டின் சூழலை கருதி மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக மமகவின் தொண்டர்கள் உழைத்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத ஆதங்கத்தை திமுக தலைமையிடம் தெரிவித்தோமே தவிர களத்தில் ஒதுங்கிவிடவில்லை.
திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்காக மமக தொண்டர்கள் மாபெரும் பங்களிப்பைச் செய்தார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டோம். இரண்டிலும் வென்றோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவ்வாறே நாகை, மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் மட்டும் வென்றுள் ளோம். இந்நிலையில் தொடர்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது.
பிளவு ஏற்படுத்த முயற்சி
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே உயர்நிலை குழுவின் அய்ந்தாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நான்கு தீர்மானங்களைப் பற்றி எழுதினால் அது திமுக மமக உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதாலோ என்னவோ, அய்ந்தாவது தீர்மானத்தை மட்டும் தனியாக எடுத்து திரிபுவாத பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
அதாவது புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. பல தருணங்களில் ஒருமித்த உணர்வோடு திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம். எனவே பிறழ உணரப்பட்ட பிழை யால் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
