ராணிப்பேட்டை, மே 23 செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் உலகை ஆளும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், அரசு அலுவலக வளாகத்திலேயே பில்லி சூனிய விவகாரம் அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நள்ளிரவில் மந்திரவாதம் செய்யப்பட்ட பானை மற்றும் முட்டைகள் கண்டெடுக் கப்பட்ட சம்பவம், அங்குள்ள அதி காரிகளையும் பொதுமக்களையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் காவலர்கள் 24 மணி நேரமும் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பலத்த பாதுகாப்பையும் மீறி, நேற்று (22.5.2026) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அலுவலக வாசலில் மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். காலையில் வழக்கம் போல் வந்த பொதுமக்களும் ஊழியர்களும் நுழை வாயிலில் கண்ட காட்சி அவர்களை திகைப்படைய வைத்தது:
கருப்புத் துணியால் மூடப்பட்டு, சிவப்பு நிறக் கயிற்றால் கட்டப்பட்டிருந்த பானை ஒன்று உடைக்கப்பட்டு கிடந்தது.: அந்தப் பானைக்குள் இருந்து குங்குமம் கலந்த இரத்த நிறத்திலான தண்ணீர் தரை முழுவதும் கொட்டிக் கிடந்தது.
உருவம் வரைந்த முட்டைகள்: கருப்பு மையால் விசித்திரமான உருவங்கள் வரையப்பட்ட 4 முட்டைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஒரு எலுமிச்சம் பழம் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
யாரோ குறிப்பிட்ட உயர் அதி காரியைக் குறிவைத்தோ அல்லது அலுவலகத்தின் செயல்பாடுகளை முடக்கவோ இந்த பில்லி சூனிய பூஜை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதால், காலையில் பணிக்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
“அறிவியல் இவ்வளவு முன்னேறிய காலத்திலும், மாவட்டத்தின் மிக முக்கிய நிர்வாக மய்யமான ஆட்சியர் அலுவலகத்திலேயே இப்படி மூடநம்பிக்கை சம்பவங்கள் நடப்பது வேதனைக்குரியது” என சமூக ஆர்வலர்கள் முணுமுணுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்புப் பணி காவல்துறையினர் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து, அங்கிருந்த மாந்திரீகப் பொருட்களை அப்புறப்படுத்தினர். 24 மணி நேரமும் காவலர்கள் இருக்கும் பகுதியில், அவர்களுக்குத் தெரியாமல் நுழைவாயில் வரை வந்து நள்ளிரவில் இந்த கைவரிசையைக் காட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
