ஆப்பிரிக்காவில் பரவிவரும்
எபோலா வைரசால் 100 பேர் உயிரிழப்பு!
எபோலா வைரசால் 100 பேர் உயிரிழப்பு!
அமெரிக்க மருத்துவருக்குத்
தொற்று உறுதி : டிரம்ப் கவலை!
தொற்று உறுதி : டிரம்ப் கவலை!
வாசிங்டன், மே 20- ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ‘எபோலா’ வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கியது.
அந்நாட்டின் இடூரி மாகாணத்தில் உள்ள சுரங்கப் பகுதியில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு, தற்போது அண்டை நாடான உகாண்டாவிற்கும் பரவியுள்ளது. இதுவரை இந்த கொடிய வைரஸால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பல சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவர். குறிப்பாக ‘பண்டிபுக்யோ’ என்ற அரிய வகை எபோலா வைரஸ் அங்கு பரவி வருவது உலக சுகாதார நிறுவனத்தை கவலையடைய செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை முறையான தடுப்பூசிகளோ அல்லது வியூக சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில், காங்கோவில் உள்ள நியன்குண்டே மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அமெரிக்க மருத்துவ மிஷனரியை சேர்ந்த மருத்துவர் பீட்டர் ஸ்டாஃபோர்டு என்பவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி ரெபெக்கா ஸ்டாஃபோர்டு உட்பட 6 பேரை அமெரிக்க அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.
இவர்கள் அனைவரும் ஜெர்மனியில் உள்ள வைரஸ் பாதிப்பிற்கான சிறப்பு மருத்துவமனைக்கு லேப் வசதிகளுடன் கூடிய விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘ஆப்பிரிக்காவில் பரவியுள்ள எபோலா வைரஸ் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார். வைரஸ் பரவலைத் தடுக்க காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு 30 நாட்கள் தற்காலிக பயணத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், அமெரிக்க விமான நிலையங்களில் தீவிர மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக ஒத்திவைப்பு
அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

வாசிங்டன், மே 20- ஈரானுடன் தற்போது முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதன் காரணமாக, அந்நாட்டின் மீது திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கத்தார் அமீர் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் அய்க்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயத் அல் நஹ்யான் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினர். ஈரானுடன் தற்போது தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதால், நாளை நடத்தவிருந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.”
அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிகவும் சாதகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என அவர்கள் கருதுகின்றனர். சிறந்த தலைவர்களாகவும், நட்பு நாடுகளாகவும் திகழும் அவர்களின் கணிப்பிற்கும், அவர்கள் மீது நான் கொண்டுள்ள மரியாதையின் அடிப்படையிலும் இந்த ஒத்திவைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்திற்கு டிரம்ப் பிறப்பித்த உத்தரவு
அரபு நாட்டுத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, அதிபர் டிரம்ப் தனது ராணுவத் தலைமைக்கு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
தாக்குதல் நிறுத்தம்: நாளை ஈரானின் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் எனப் போர்ச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டேனியல் கெய்ன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை பேச்சுவார்த்தையில் ஏற்புடைய ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், எந்த நேரத்திலும் ஈரானின் மீது முழுமையான மற்றும் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருக்குமாறும் ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
