ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பு தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, மார்ச் 27- நாடாளு மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று (26.3.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து, ராகுல்காந்தி தகுதி இழப்பு செய்யப் பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று அறப்போராட்டம் நடத் தினர்.

தலைநகர் டில்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸார் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், காந்தி நினைவிடத்துக்கு வெளியே காங்கிரஸார் போராட்டம் நடத் தினர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பிரதமரின் மகன், நாட்டின் ஒற்றுமைக்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு நடைப்பயணம் சென்ற ஒருவர், ஒருபோதும் நாட்டை அவமானப்படுத்த முடி யாது. உயிர்த் தியாகம் செய்தவரின் மகனை தேச விரோதி என்கிறீர்கள்.

தேர்தலில் போட்டியிட ராகு லுக்கு தடை ஏற்படுத்துவது, நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. அராஜக ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டின் ஜனநாயகத்துக்காக நாங்கள் எதை யும் செய்யத் தயாராக இருக்கி றோம். பாஜகவினரின் அச்சுறுத்த லுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

தொழிலதிபர் அதானி விவகா ரத்தில் பிரதமர் குறித்து கேள்வி கேட்டதற்காக, ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருப்பவர் களுக்கு, மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

மல்லிகார்ஜுன கார்கே…

காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பேசும்போது, ‘‘நாட்டை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி, லலித் மோடியை விமர்சனம் செய்தால், ஆளும் கட்சிக்கு என்னகவலை? நாட்டுக் காக சேவையாற்றியவரை நீங்கள் தண்டிக்கிறீர்கள்.நாட்டைக் கொள்ளையடித்தவர்களை வெளி நாட்டுக்கு அனுப்புகிறீர்கள். மக்க ளுக்காகவும், வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத் துக்காகவும் ராகுல் போராடுகிறார்’’ என்றார். இதேபோல, இமாச்சலப் பிரதேம், ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத்திலும் காங்கிரஸார் நேற்று போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் 70 இடங்களில் அறப்போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

சென்னையில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்ற போராட்டத்தில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திருநாவுக் கரசர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட் டோரும், சைதாப்பேட்டை பன கல் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில், விஜய் வசந்த் (நாடாளுமன்ற உறுப்பினர்), மாநிலத் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோ ரும், திருவொற்றியூர், பெரம்பூர், அமைந்தகரை, தேனாம்பேட்டை, போரூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாநில மேனாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, ஏ.செல்லகுமார் (நாடாளுமன்ற உறுப்பினர்) உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *