சென்னை, மே 17 அதிமுகவில் ஈ.பி.எஸ்., எஸ்.பி. வேலுமணி தரப்புகளுக்கு இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் கொறடா விவகாரம் குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3ஆவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண் முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கலகக் குரல் எழுப்பினர்.
இதனால் அதிமுக ஈ.பி.எஸ். அணி, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணி என 2ஆக பிளவுபட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளும் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் த.வெ.க.வுக்கு ஆதரவாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஈ.பி.எஸ்., த.வெ.க. ஆதரவு நிலைப்பாடு கொண்ட 26 பேரின் கட்சிப் பதவி களை பறித்தார்.
இந்நிலையில், த.வெ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கே.பி. முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர். தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கடிதம் வழங்கினர்.
மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளித்தனர்.
இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பேசிய சி.வி. சண்முகம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தங்களால் சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படாது என்றார்.
அதேபோல் தங்கள் தரப்பை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என எஸ்பி வேலுமணி கூறினார். இதனிடையே, கட்சிப் பொறுப்புகளில் இருப்போரை நீக்கியே பழகிப்போன ஈ.பி.எஸ்., ஒருநாள் தன்னையே நீக்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் சென்ற முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், கட்சிக்கு விசுவாசமாக இருந்த தன்னை ஈ.பி.எஸ். நீக்கிவிட்டதாக கண்ணீர் மல்க முறையிட்டார்.
ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஈ.பி.எஸ். அணிக்கு மாறி மாநிலங் களவை உறுப்பினர் பதவிபெற்ற தர்மர் திடீரென, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து அந்த அணியில் இணைந்தார். இதனிடையே, சென்னை அதிமுக தலைமையகத்திலும், புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு தரப்பும் முனைந்ததால் அங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “அதிமுக கொறடா நியமன விவகாரம் குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. அதிமுக வினர் இரு தரப்பாக பிரிந்து மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பும் கடிதம் கொடுத்து 2 நாட்கள்தான் ஆகிறது. பரிசீலித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித் துள்ளார்.
