சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மய்யங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஜே.குமரகுருபரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் ஆகியோர் நேற்று (28.4.2026) நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூன்று முக்கிய மய்யங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன:
ராணி மேரி கல்லூரி: ஆர்.கே. நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப் பாக்கம்-திருவல்லிக்கேணி (5 தொகுதிகள்).
லயோலா கல்லூரி: பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் (6 தொகு திகள்).
அண்ணா பல்கலைக்கழகம்: விருகம் பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி (5 தொகுதிகள்).
இந்த மய்யங்களில் உள்ள பாதுகாப்பு அறைகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் முறைப்படி சீல் வைக்கப்பட்டுள்ளன.
மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
வாக்கு எண்ணும் மய்யங்களின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
கண்காணிப்புக் கேமராக்கள்: மூன்று மையங்களிலும் பாதுகாப்பு அறைகளுக்கு வெளியே மொத்தம் 320 சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மத்திய துணை ராணுவப் படையினர்
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்.
ஆயுதப்படை மற்றும் சட்டம்-ஒழுங்கு காவலர்கள்.
சுழற்சி முறைகளில் மொத்தம் 1,160 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியில் நேற்று (28.4.2026) நடைபெற்ற ஆய்வின்போது, தொகுதி வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த ஆய்வில் காவல் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், இணை ஆணையர் பண்டி கங்காதர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை இந்தப் பாதுகாப்பு வளையம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
