விருதுநகர், ஏப்.23 விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் சட்டமன்றப் பகுதியில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 21.4.2026 அன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டம் போதிய வரவேற்பின்றி அமைந்தது கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்
மதுரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி முக்குராந்தல் பகுதி வரை சந்திரபாபு நாயுடு ‘ரோடு ஷோ’ நடத்தினார். வழக்கமாக நட்சத்திரப் பேச்சாளர்கள் வரும்போது காணப்படும் உற்சாகமோ, மக்கள் கூட்டமோ இந்த ஊர்வலத்தில் தென்படவில்லை. பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டாததால், பிரசாரம் நடந்த சாலைகள் பெரும்பாலும் வெறிச் சோடியே காணப்பட்டன.
புரியாத மொழி; பாதியில் நின்ற பேச்சு
பிரசாரத்தின் போது தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்ற முயன்ற சந்திரபாபு நாயுடு, தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் சில சொற்களைப் பயன்படுத்தினார். எனினும், அவற்றை அவர் தெலுங்கு உச்சரிப்பில் பேசியதால்: அங்கிருந்த பெரும்பாலான தமிழர்களுக்கு அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை. அங்கு வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களுக்கும் அந்த உச்சரிப்பு குழப்பத்தையே தந்தது. இதை கவனித்த வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மொழி புரியாதது குறித்து சுட்டிக்காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த நாயுடு, தனது உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு, சில வார்த்தைகளை மட்டும் ஆங்கிலத்தில் பேசிவிட்டு கிளம்பினார்.

