சென்னை, மார்ச் 22- தங்கப் பத்திரங்கள் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலீட்டாளர்கள், அந்தப் பத்திரங்களை விற்பனை செய்யும் முறையில் உள்ள நுணுக்கங்களை சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.. அந்தவகையில், காலக்கெடுவை தவறவிட்டால் வரி செலுத்த வேண்டுமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
ஒன்றிய அரசு வெளியிடும் இந்த இறையாண்மை தங்கப் பத்திரங்களின் (SGB) மொத்த காலம் 8 ஆண்டுகள் என்றாலும், 5 ஆண்டுகள் முடிந்ததுமே முதலீட்டாளர்கள் அவற்றை மீண்டும் அரசிடமே ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது..
தங்கப் பத்திர திட்டம்
இந்த 5 ஆண்டு காலக்கெடுவுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகப் பத்திரங்களை ஒப்படைத்து முன்கூட்டியே பணத்தைப் பெறும்போது, அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரிச் சட்டத்தின்படி முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.. இது தனிநபர் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய லாபமாகும்..
ஆனால், பல முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் இந்தச் குறிப்பிட்ட காலக்கெடுவை அல்லது மீட்பு ஜன்னல் (Redemption Window) என்று சொல்லப்படும் தேதியை கவனிப்பதில்லை.. அந்த சரியான தேதியை தவறவிட்டுவிட்டு, பிறகு அவசரமாகப் பங்குச் சந்தை தரகர் மூலம் சந்தையில் அந்தப் பத்திரங்களை விற்பனை செய்கிறார்கள்..
பத்திரங்கள்
– சந்தை விற்பனை
– சந்தை விற்பனை
இப்படி அரசு சொன்ன தேதியில் அரசிடம் ஒப்படைக்காமல், வெளிச்சந்தையில் ஒரு இடைத் தரகர் வழியாகப் பத்திரங்களை விற்கும் போது, அரசு வழங்கிய அந்த முழு வரி விலக்குச் சலுகை ரத்தாகிவிடுகிறது.. நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரங்களை வைத்திருந்தாலும் கூட, சந்தையில் விற்பனை செய்வதால் அதற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது..
இப்போதுள்ள விதிமுறைகளின்படி, இப்படி காலக்கெடுவை தவறவிட்டு சந்தையில் விற்பனை செய்பவர்கள், தங்களுக்குக் கிடைத்த லாபத்தில் 12.50 சதவீதத்தை நீண்ட கால மூலதன ஆதாய வரியாக (LTCG) அரசுக்குச் செலுத்த வேண்டும்..
உதாரணமாக, ஒருவர் 2020ஆம் ஆண்டு வாங்கிய பத்திரத்தை 2025இல் அரசு அறிவித்த தேதியில் விற்காமல், சில மாதங்கள் கழித்து 2026இல் ஒரு தரகர் மூலம் விற்றால், அவருக்குக் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை வரியாகக் கட்ட நேரிடும்.. இது முதலீட்டாளர்களுக்குத் தேவையற்ற நிதி இழப்பை ஏற்படுத்தும்..
வரிச் சலுகைகள்
மேலும், 2026-27 நிதியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பட்ஜெட் விதிகளின்படி, இந்த வரிச் சலுகைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளன.. இனிவரும் காலங்களில், ஒரு முதலீட்டாளர் 8 ஆண்டுகள் முழுமையாகப் பத்திரங்களை வைத்திருந்து, அது முதிர்வடையும் போது மட்டுமே அசல் சந்தாதாரர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது..
எனவே, தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களின் 5 ஆண்டு காலக்கெடு எப்போது முடிகிறது என்பதையும், ரிசர்வ் வங்கி எப்போது அந்தப் பத்திரங்களை மீண்டும் வாங்குகிறது என்பதையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.. பங்குச் சந்தையில் தரகர் மூலம் விற்பதை விட, அரசு சொல்லும் தேதியில் அரசிடமே நேரடியாக ஒப்படைப்பதுதான் முழு லாபத்தையும் வரி இல்லாமல் பெறுவதற்கான சரியான வழியாகும்
புதிய பட்ஜெட் விதிகள்
குறிப்பாக, 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு ரிசர்வ் வங்கி அறிவிக்கும் அந்தச் சில நாட்களை மட்டும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், எந்தவித வரிப் பிடித்தமும் இல்லாமல் முழுப் பணத்தையும் கையில் வாங்க முடியும்..
அரசின் இந்தச் சலுகையைத் தவறவிடுபவர்கள், தேவையற்ற வரிச் சுமைக்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல், புதிய பட்ஜெட் விதிகளின்படி வரும் காலங்களில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்.. எனவே, உங்கள் முதலீட்டு ஆவணங்களைச் சரிபார்த்து, முதிர்வு தேதியைச் சரியாகக் குறித்து வைத்துக்கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனமான முதலீட்டு முறையாகும்.
