ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2025 குடிமைப் பணித் தேர்வுக்கான (CSE) முடிவுகளை கடந்த 6.3.2026 அன்று வெளியிட்டது. அய்ஏஎஸ், அய்எஃப்எஸ், அய்பிஎஸ், மத்திய சேவைகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு மொத்தம் 958 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
299 பேர் பெண்கள்
வழக்கத்தை போல், மகளிர் தேர்வர்கள் இந்தாண்டிலும் குடிமைப் பணித் தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், கணிசமான இடங்களையும் மகளிர் பெற்றுள்ளன. மொத்தம் தேர்ச்சி அடைந்த 958 பேரில், 299 பேர் மகளிர் என்பது கவனிக்க வேண்டியது.
முதல் வரிசை (‘டாப்’) இடங்களை
பிடித்த பெண்கள்
மதுரையை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே என்ற பெண்மணிதான் அகில இந்திய அளவில் 2ஆவது இடத்தை பிடித்தார். மேலும், ஜின்னியா அரோரா (6ஆவது இடம்), ஆஸ்தா ஜெயின் (9ஆவது இடம் ) என மொத்தம் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களில் பெண்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், 2025 தேர்வில் முதல் 25 இடங்களில் 11 பேர் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
சமூக வாரியான விவரங்கள்
2025 குடிமைப் பணித் தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களின் சமூக வாரியான விவரங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான 958 பேரில் 317 பேர் பொதுப் பிரிவினர், 104 பேர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 306 பேர் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC), 158 பேர் பட்டியல் சமூகத்தினர் (SC), 73 பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆவர்.
தமிழ்நாட்டில் டாப் 3 யார்?
தமிழ்நாட்டில் இருந்து 56 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ராஜேஸ்வரி சுவே (2ஆவது), ஏ.ஆர். ராஜா மொஹைதீன் (7ஆவது), ஸ்ருதி.ஆர் (18ஆவது) ஆகிய மூன்று பேர் டாப் ரேங்க் பெற்றுள்ளனர். 56 பேரில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள்.
